Friday, November 30, 2012

நேர்முகத் தேர்வு- ஓர் அலசல்


நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் –ஓர் அலசல்
 
 
 
 
வேலைப் பெறுவதற்காக ஏதாவது நேர்முகத் தேர்வுக்குப் போகும் பொழுது, வழக்கமாக நாம் Resume கொண்டு போவோம். அதை மட்டும் பார்த்து விட்டு நமக்கு யாரும் வேலைத் தர மாட்டார்கள். அதையும் தாண்டிப் பல கேள்விகள் நம்மிடம் கேட்பார்கள். அதற்கு நாம எப்படிப் பதில் சொல்கின்றோம் என்பதைப் பொறுத்து, நம்முடைய திறமை, மனஉறுதி என்று பல விடயங்களத் தீர்மானிப்பார்கள். ”வழவழ“ என்று பதில் சொல்லாமல், சுருக்கமாவும் தீர்க்கமாவும் நம்முடைய பதில் இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.
அப்படி நேர்முகத் தேர்விற்குப் போகும்போது என்ன மாதிரியான கேள்விகள் பொதுவாகக் கேட்கப்படும் என்று ஓர் அலசல்:
 
1. உங்களைப் பற்றிய விபரம் கூறுங்கள்:
 
இந்தக் கேள்வி, உங்களைப் பற்றிய சுய விபரம் சம்பந்தப்பட்டதா இருக்கும். அஃதாவது உங்களோட பெயர், இடம், கல்வித் தகுதி, தொழில்நுட்பத் தகுதி பற்றி நீங்களே தொகுத்துச் சொல்ல வேண்டும்(அதுக்காக உங்க வரலாறு முழுக்கச் சொல்லி” போர் ”அடிச்சிடாதீங்க..)
 
 
2. உங்களைப் பற்றிச் சிறு விளக்கம் கூறுங்கள்?
 
இதுவும் முதல் கேள்வியும் ஒரே மாதிரியாகத் தோன்றலாம். ஆனால் இஃது உங்கள் சுய விபரம் பற்றி அல்ல, உங்கள் குணநலன் பற்றியது. அதாவது, நீங்கள் எப்படிப்பட்டவர் என்று சுருக்கமாகச் சொல்ல வேண்டும். (எதுக்கும், போறதுக்கு முன்னாடி உங்க நண்பர்களிடம்  கேட்டுத் தெரிஞ்சு வச்சுக்கங்க..)
 
3. இதற்கு முன் பணிபுரிந்த அனுபவம் பற்றிக் கூறுங்கள்?
 
 
அனுபவம் என்பது பெரும்பாலான நிறுவனங்கள்ல அவசியமானதாக மாறி விட்டது. இதைப் பொறுத்து வேலை வாய்ப்புகள் அமையும் சூழலும் உருவாகி விட்டன. (இஷ்டத்துக்கு அள்ளி விடக்கூடாது.. அதுக்கான சான்றிதழும் இருக்கணும்..)
 
4. பொழுதுபோக்கு அம்சங்கள் என்ன?
 
”தூங்குவேன், டிவி பாப்பேன்“ என்றெல்லாம் பதில் சொல்லாமல், அவங்களைக் கவர்ந்திழுக்கும் வண்ணம்  பொழுதுபோக்கு அம்சங்களைப் பற்றிச் சொல்ல வேண்டும். அதற்காக  நமக்குத் தெரியாத விடயங்களைப் பற்றிச்  சொல்லிட்டு முழிக்க்க்கூடாது. ஏனென்றால் கேள்விகள் அதைப்பற்றியும் வரக்கூடும்.
 
 
5. ஏற்கனவே பணி செய்த நிறுவனத்திலிருந்து விலகக் காரணம்?
 
“அதிகமா லீவு போட்டேன், அதுனால அவங்களே தொரத்திட்டாங்க” என்று ரொம்ம்ம்ம்ப நேர்மையாகப் பதில் சொல்லக் கூடாது. உங்கள ரொம்ம்ம்ப நல்ல்ல்ல்லவர்னு நினைக்கின்ற மாதிரியான காரணத்தைச் சொல்லணும்.
 
6. இந்த நிறுவனத்தில் உங்களது பங்களிப்பு என்னவாக இருக்கும்?
 
இஃது  உழைப்பு பற்றிய கேள்வி. நீங்க இதற்குக் கொடுக்கும் பதில் அவர்கட்கு உங்களின் மீது  நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்த வேண்டும். (அதுக்காக ஓவர் ஆக்டிங் குடுக்கக்கூடாது.. அடக்கிவாசிங்க..)
 
7. என்ன சம்பளம் எதிர்பார்க்குறீர்கள்?
 
இது மிகவும் முக்கியமான கேள்வி. கூடுமானவரை நாம் வாயைத் திறக்காமல் இருப்பதே நல்லது. ஏனென்றால் நாம் குறிப்பிடும் தொகை, ஒருவேளை அவங்க நிர்ணயித்து வைத்திருப்பதை விடக்  குறைவானதா இருக்கலாம். (பெர்ஃபார்மன்ஸப் பொறுத்துச் சம்பளம் குடுங்க“னுச் சொல்லிட்டுப் பம்மிடலாம்..)
 
 
8. உங்கள் பலம், பலவீனமாக எதனைக் கருதுகிறீர்கள்?
 
இஃது உங்களை நீங்கள் எந்த அளவுக்குப் புரிந்து வைத்திருக்கின்றீர்கள் என்பதைக் காட்ட உதவும். அதுமட்டுமில்லாம, உங்களோட நடத்தையை எடைபோட உதவும்.
 
9. இந்த நிறுவனம் பற்றி உங்களுக்குத் தெரிந்தத் தகவல்கள் என்ன?
 
இது மிகவும் முக்கியமான கேள்வி. குறிப்பிட்ட வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, அந்த நிறுவனம் பத்தியும், அந்த வேலை பற்றித் தெளிவாகத் தெரிஞ்சு வைத்துக் கொள்வது அவசியமானது. (ஜஸ்ட்.. விளம்பரம் பாத்தேன், அப்ளைப் பண்ணேன், தட்ஸ் ஆல்“னுத் தெனாவெட்டாப் பதில் சொல்லி ஆப்பு வாங்காதீங்க..)
 
10. பணிநிமித்தம் பயணம் செய்யச் சம்மதிப்பீர்களா?
 
 
வேலை நிமித்தமாகச் சில நாள் வெளியூர்ச்செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அதற்கு நீங்கள் தயாராக இருக்கின்றீர்களா என்று முன்னர்த் தீர்மானித்துக் கொள்வது அவசியம். (கூட வேலைபாக்குறப் பொண்ணைத் துணைக்கு அனுப்புவீங்களானு கேட்றாதீங்க...)
 
11. முந்தைய நிறுவனத்தில் ஏதேனும் இக்கட்டான சூழ்நலையைக் கையாண்ட அனுபவம் உண்டா?
வேறு நிறுவனத்தில் வேலை பார்த்த அனுபவம் இருந்தது என்றால், இந்தக் கேள்விக்கான பதில், நம் திறமையை யூகிக்கச் செய்யும். (ஆபீசுக்கு லீவு போட்டுட்டு, பாட்டி செத்துப் போய்ட்டாங்கனுச் சமாளிச்ச, அனுபவத்தச் சொல்லி வச்சுடாதீங்க..)
 
12. தனித்துச் செயல்பட விருப்பமா? அல்லது குழுவாகச் செயல்பட விருப்பமா?
 
இஃது அவரவர் தன்மேல வைத்திருக்கின்ற நம்பிக்கையப் பொறுத்துப் பதிலளிக்க வேண்டும். (நா தனியா தான் வருவேன்.. ஆனா தனியாள் இல்லேனு பன்ச் அடிச்சுடாதீங்க..)
 
13. இங்கு வேலைக் கிடைக்காத பட்சத்தில் உங்களுடைய பிரதிபலிப்பு என்னவாக இருக்கும்?
 
மனத்தினில் ”கெட்ட வார்த்தையில் திட்டுவேன்“ என்று சொல்லத் தோன்றும். ஆனால் சொல்லி விடாதீர்கள் இஃது உங்களின் விடா முயற்சி, நம்பிக்கைப் பற்றிய  கேள்வியாக இருக்கும். இந்தப் பதிலை வைத்துக் கூட வேலைக் கிடைக்கலாம்.
 
14. எவ்வளவு காலம் இங்குப் பணி செய்யத் தயாராக இருக்கிறீர்கள்?
(“ஃப்ரெண்ட் கம்பெனில அப்ளைப் பண்ணிருக்கேன். கிடைச்சதும் ஓடிடுவேன்“னு அதிமேதாவித்தனமாகப் பதில் சொல்லக் கூடாது.) இதற்குக் குறிப்பிட்டக் காலவரையறை எதுவும் சொல்லாமல், கடைசி வரைக்கும் இருப்பேன் என்று சொல்ல வேண்டும். தொடர்ந்து வேலை செய்ய முன்வரும் பொழுது வாய்ப்புகள் தரப்படலாம்.
 
15. உங்களுக்கு, எங்களிடத்தில் கேட்க வேண்டிய கேள்விகள் ஏதாவது இருக்கின்றனவா?
 
நிறுவனம் அல்லது பணி பற்றி, நமக்கு ஏதாவது ஐயங்கள் உளவா என்னும் நோக்கத்தில் கேட்கப்படும் கேள்வியாகும். திறம்படக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். இந்தக் கேள்வியில இருந்தும் நம்மளோட, தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஆராயப்படும். (இங்க எத்தனப் பொண்ணுங்க வேலை பாக்குறாங்க“ன்னுக் கேட்டுறாதீங்க...)
 
 
 
**********************************************
 
 
நிறுவனங்களப் பொறுத்து, இன்னும் பல கேள்விகள் கேட்கப்படலாம். கேள்விகள் எதுவாகயிருந்தாலும் துணிவாகத் தடுமாற்றம் இல்லாமல் நாம் கூறும் பதில்கள் மிகவும் அவசியம் என்பதில் எண்ணத்தில் நிறுத்திக் கொள்க. நம்மிடமிருந்து வெளிப்படும் பதில்கள், சம்பந்தப்பட்டவர்க்குத் திருப்தியளிக்கும் பொழுது, அதற்கான பலன் உறுதியாக வெற்றிக் கனியாக அமையும்!
 
-**********************************************- 
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்:  kalaamkathir7@gmail.com

1 comment:

  1. ஒவ்வொன்றும் அருமை... பலருக்கும் உதவும்...

    நன்றி...

    ReplyDelete