Tuesday, November 20, 2012

என் கேள்விக்கென்ன பதில்?




சுதந்திரம் அடையத் தந்தது
.... சுரண்டல் பெருக்கித் தின்னவா?
இதந்தரும் நலத்தை மக்களும்
.... இனிதே விரும்பி மின்னவா ?

உரிமைகள் ஒருசிலர் மட்டும்
....உரிமையாய்ப்  பெற்றுச் சூழவா?
விரிவுடன் அனைவரும் பெற்று
....விரும்பிய வண்ணம் வாழவா?

கடமைகள் எல்லாம் வெற்றுக்
.. கண்துடைப் பென்பதே எல்லையா?
உடைமைகள் காத்து நாட்டின்
.. உன்னதம் போற்றுவோர் இல்லையா?

செல்வம் என்பதே அரசியலார்ச்
....சொத்துச் சேர்த்திட  மட்டுமா?
கல்வி கற்றவர் உழைப்பினாலே
....காசு சேர்த்திடக் கிட்டுமா?

தாயகம் இனியும் சாதிகளின்
....தனித்தனித் தீவு நாடா?
தூயநல் மனித நேயமதைத்
....துளிர்விடும் அன்புக் காடா?

ஒருமைப் பாடு வெற்று
....உளறலில் வெளிவரும் கேலியா?
அருமை நாடு பெற்ற
....அடிப்படை உரிமையும் போலியா?

பாரதத் தேசமும் ஊழலால்
....பேர்கெடப் போகவும் வேண்டுமா?
யாரதன் காரணம் தாமதம்
...இன்றியே காணவும் தூண்டுமா?

மனிதர்நாம் என்பதை நாளும்
......மறந்துப் போவதும் ஆகுமா?
இனிதாய்நம் அன்பினைக் காட்டி
.....இகத்தில் வாழ்தலும் வேண்டாமா?

வினாக்களை யானும் ஈண்டு
....விடுத்தனன் உங்களை நோக்கி
கனாக்களில் வாழும் சூழல்
...களைந்திட ஆவலும் தேக்கி

அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com


2 comments:

  1. சிந்திக்க வேண்டிய கேள்விகள்...

    ReplyDelete
  2. விடையறி யா வினாக்கள்

    ReplyDelete