Saturday, November 10, 2012

என்னாட்டின் இளைஞர்காள்! என்னாச்சு உம் நிலைகள்?!




நாடுகாக்க வந்தவராய் வரலாற் றேட்டில்
.. நாம்காணும் முந்தையநல் லோர்கள் ஆட்சிப்
பீடுடனே மக்களுக்குப் பணியை ஆற்றிப்
.. பேர்பெற்ற  நிகழ்வுதனைச் சொல்லப் போமோ?
காடுமேடு வளைத்ததனால் குடும்பம் காக்கக்
.. கட்சிவளர்ப் பதையின்று காண்கின்  றோமே!
கூடிநிற்கும் தொண்டருக்குக் கைய  சைப்பே
.. குதூகலத்தைக் கொடுக்குமென்ப  தவரின் கொள்கை!

சிந்திக்கும் பழக்கமின்றி மூளை வேலை
.. செய்யவிடாக் கூட்டம்தான் காண்போம்  இன்று
 நிந்திக்கும் பழக்கமான  காலில் வீழும்
.. நிலைகெட்டக்   கூட்டமிவர் பின்னால்  செல்லும்
மந்திக்கும் மனிதனுக்கும் வேறு பாடே
.. மதியென்று அறிந்திடாத மடையர்க் கூட்டம்
சந்திக்கும் பொழுதெல்லாம் என்ன பேசும்?
.. சதித்திட்டம் தீட்டத்தான் கூடு வாரே!

எப்படியோ நலமாக வழிகள் காட்டி
.. இவர்களெல்லாம் சபையில்நற் திட்டம் போட
தப்பென்று அறிந்துகொண்டே வாக்கை விற்கும்
.. தாராளம்தான் வறியவரின் நெஞ்சில் ஊறும்
அப்படியே அவர்வாழ்க்கை இருந்தால் தானே
.. அடுத்தமுறை பதவித்தேர் ஏறிப்  போவார்
இப்படியே எந்நாட்டில் குடிகள் ஆட்சி
.. இழிநிலையில் இருப்பதனால் அதிர்ச்சி யுண்டோ?

ஆங்கிலேயர்க் கடிமையாக இருந்த  நாளில்
.. ஆர்வமுடன் இளைஞர்கட் தலைவர் பின்னே
ஓங்கியபே ருணர்வோடு கிளர்ந்த மாட்சி
.. ஒருநொடியில் உள்ளத்தில் தோன்றும் காட்சி
நீங்கியதும் அடிமைவாழ்வே எனுங்கொண்    டாட்டம்
.. நீடிக்கும் நிலையுளதா? ஏழை  மக்கள்
ஏங்குகிறார் கொள்ளையராய்ச் சொந்த   நாட்டார்
.. ஏய்ப்பூழல் கொடுஞ்சுரண்டல் காணும்  போழ்தே!

திரைப்படங்கள் மிகைப்படுத்தும் ஆட்டம் பாட்டம்
.. திசைமாற்றி வைத்ததனால் ஒழுக்கம்  ஓட்டம்
நரைமறைத்து நடிகனவன் இளைய பெண்ணை
.. நளினமின்றித் தீண்டிவிளை   யாடக்  கண்டு
முறைதவறி நடப்பதற்குத் தூண்டும் தீமை
.. மூளையில்லார்க்  கூட்டத்தில் இளைஞர் முந்தி!
குறைகண்டால் சீற்றமுடன் சொல்வார் உண்டோ?
.. கூரறிவின் செயல்திறனைக் காட்டு   வாரோ?

பெற்றவர்கள் கற்றவனாய் ஆகு  தற்குப்
.. பெரும்பாட்டின் அருமையினை அறிவா  யாநீ?
மற்றவர்போல் நீயின்றி உன்னைச் சான்றாய்
.. மதித்துப்பின் தொடர்ந்திடவே பல்லாற்  றானும்
பற்றுமொழி நாட்டின்முன்   னேற்றம்  என்றே
.. பணியாற்றும் அணியொன்றைக் காண்பா   யாநீ?
முற்றுமிந்தக் கொடுமைகளை இளைஞர்க் கூட்டம்
.. முற்றிலுமாய் ஒழித்திடத்தான் வழிகாண் பீரே !

அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com


1 comment:

  1. இன்றை இளைஞர்கள் அனைவருக்கும் அறிவுரை கூறும் நற்கவிதை

    ReplyDelete