Wednesday, August 31, 2011

கடமையல்லாத - சுன்னத்தான நோன்புகள்


ஷவ்வால் மாத நோன்பு.

யார் ரமளான் மாத நோன்பிற்குப் பிறகு ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை வைக்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போலாவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூ அய்யூப் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.

ஹஜ் மாதத்தில் அரஃபா நோன்பு (ஹாஜிகள் அல்லாதவருக்கு)

அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள் ''அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கும் என நான் ஆதரவு வைக்கிறேன்" என்று கூறினார்கள். அறிப்பாளர் அபூகதாதா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.

ஹாஜிகள் நோன்பு நோற்கத் தடை.

அரஃபா தினத்தன்று, அரஃபா மைதானத்தில் (கூடியிருப்போர்) நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள். அறிப்பாளர் அபூஹுரைரா (ரலி) அபூதாவூத், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா.

முஹர்ரம் மாத நோன்பு

நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். "இந்நாளின் சிறப்பென்ன?" என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள், "இது மகத்தான நாளாகும். இந்நாளில்தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம்" என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், "நாங்கள்தாம் மூஸா (அலை) அவர்களைப் பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள்" என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் (முஸ்லிம்களை) நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அறிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்

நபி(ஸல்) அவர்கள் யூதர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்யும் விதமாக ஆஷுரா நாளின் முந்திய(ஒன்பதாம்) நாளும் நோன்பு நோற்குமாறு கூறினார்கள். மேலும், "நான் வரக்கூடிய வருடம் இருந்தேனேயானால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன்" என்று குறிப்பிட்டார்கள். ஆனால் அதே வருடத்தில் மரணமடைந்தார்கள். அறிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம் (இது ஹிஜிரீ 10ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்ததாகும்).

மாதத்தில் மூன்று நோன்புகள்.

"மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும், ரமளானில் நோன்பு நோற்பதும் காலமெல்லாம் நோன்பு நோற்பதாக அமையும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூகதாதா (ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்.

''நீர் மாதத்தில் மூன்று நோன்புகளை நோற்றால் அதை பதிமூன்று, பதினான்கு, பதினைந்து ஆகிய நாட்களில் நோற்கவும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூதர் (ரலி) நூல்கள்: திர்மிதி, நஸயீ, அஹ்மத்.

திங்கள், வியாழன் கிழமைகளில் நோன்பு 

நபி (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தனர்.அறிப்பாளர் அன்னை, ஆயிஷா (ரலி) நூல்கள்: அஹ்மத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா.

"ஒவ்வொரு வியாழனும், திங்களும் அமல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. நான் நோன்பு நோற்றிருக்கும் போது என் அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூஹீரைரா (ரலி) நூல்கள்: அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா.

நபி (ஸல்) அவர்கள் மாதத்தில் மூன்று நோன்புகளை மாதத்தின் ஆரம்பவார திங்கட்கிழமை, அடுத்து வரக்கூடிய வாரம் வியாழக்கிழமை, அதற்கு அடுத்து வரக்கூடிய வியாழக்கிழமை என்று நோற்பார்கள். அறிப்பாளர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: நஸயீ.

வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கலாமா?

நான் ஜாபிர்(ரலி) அவர்களிடம், "வெள்ளிக்கிழமை நோன்பை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்களா?" என்று வினவினேன் அதற்கு ''ஆம்'' என்றார்கள். அறிவிப்பாளர், முஹம்மது பின் அப்பாத் (ரஹ்) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

''உங்களில் ஒருவர் வெள்ளிக்கிழமைக்கு முந்திய பிந்திய நாள் நோன்பு நோற்றாலன்றிவெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிப்பாளர் அபூஹுரைரா (ரலி) புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா.

சனிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கக்கூடாது.

"உங்கள் மீது கடமையாக்கப்பட்டு இருந்தாலே தவிர சனிக்கிழமை நோன்பு நோற்க வேண்டாம்,(சனிக்கிழமைகளில் உண்பதற்கு) திராட்சைத் தொலி அல்லது மரக்குச்சியைத் தவிர வேறு ஏதும் கிடைக்காவிட்டால் அதையாவது மென்றுவிடட்டும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிப்பாளர் ளும்மாயி பின்த் புஸ்ர்(ரலி) திர்மிதி, அபூதாவூத்

இரு பெருநாள்களில் நோன்பு இல்லை.

நபி(ஸல்) அவர்கள் இரண்டு நாள்கள் நோன்பு நோற்பதற்குத் தடை விதித்துள்ளார்கள் அவை ஃபித்ரு பெருநாள் மற்றும் குர்பானி பெருநாள். அறிப்பாளர் அபூஸயீதில் குத்ரி (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

"அய்யாமுத் தஷ்ரீக் (ஹஜ் பெருநாள் அடுத்த மூன்று) நாட்களும் உண்பதற்கும், பருகுவற்கும் உரிய நாட்களாகும். அந்நாட்களில் நோன்பு ஏதும் இல்லை" என்று பிரகடனம் செய்யுமாறு எனக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிப்பாளர் ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி) நூல்: அஹ்மத்.

காலமெல்லாம் தொடர் நோன்பு கூடாது

''நீங்கள் தொடர் நோன்பு நோற்காதீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது ''நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?" என்று நபித்தோழர்கள் கேட்டனர் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''நான்(எல்லா விஷயத்திலும்) உங்களைப் போன்றவனல்லன். நிச்சயமாக நான் உண்ணவும், பருகவும் வழங்கப்படுகிறேன் என்றோ உண்ணவும் பருகவும் வழங்கப்பட்டு இரவு பொழுதை கழிக்கிறேன்"என்றோ கூறினார்கள். அறிப்பாளர் அனஸ்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

"மாதந்தோறும் மூன்று நோன்பு நோற்பீராக!" என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியபோது, "இதைவிட எனக்கு அதிக சக்தியுள்ளது" என்றேன். முடிவில் நபி (ஸல்) அவர்கள், "ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் விட்டு விடுவீராக அதுதான் நோன்புகளில் சிறந்ததாகும், என் சகோதரர் தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்கவே இல்லை" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

(சத்தியமார்க்கம் இணையதளத்தில்இருந்து )

Sunday, August 28, 2011

ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

உங்களுக்கும்
உங்கள் குடும்பத்தினருக்கும்
எங்களுடைய
மனமார்ந்த ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

 

இது ஒரு சத்திய முழக்கம்


சத்திய முழக்கமாக,
உண்மையின் உறைவிடமாக,
ஏக இறை கொள்கை நெறி பூண்டு,
இணையத்தில் 
உலா வரும் 

சக்தியின் 
காணுங்கள்,
ஊக்கப்படுத்துங்கள்.








Saturday, August 27, 2011

காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்...


ஜூலை 26 ஸ்ரீ நகரின் காலை பொழுது தொழுகையோடு விடிந்தது. பக்கத்தில் அழகான ஒரு பள்ளிவாசலும் இருந்தது.
 
நாங்கள் ஸ்ரீ நகருக்கு ஒரு சுற்றுலா பயணிகளை போல தான் வந்தோம். காரணம் இங்கு மனித உரிமை அமைப்புகள் என்று சொல்லிக்கொண்டோ, பத்திரிகையாளர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டோ வருவது மிக பெரிய ஆபத்து.
 
அரசும், உளவுத்துறையும், அரசு படைகளும் ஒரு காலத்திலும் காஷ்மீரிகளின் துயரங்களை வெளி உலகுக்கு காட்டி விட கூடாது என்பதில் மிகுந்த அக்கறை காட்டுகின்றனர்.
 
நாங்கள் போன சமயம் சீக்கியர்களின் புகழ்பெற்ற தலைவரும், முன்னாள் நடாளுமன்ற வாதியுமான சிம்ரன்ஜித் சின் மான் காஷ்மீர் மக்களை சந்திக்க வந்தார். ஜூலை 22 அன்று மான் அவர்கள் ஜிலானியை சந்தித்து விட்டு தொடர்ந்து பல்வேறு தரப்பினரையும் சந்திக்க விருந்தார். ஆனால் நாங்கள் போன அன்று அவரை காஷ்மீரிலிருந்து வெளியேற்றி ஸ்ரீ நகர் விமான நிலையத்திலிருந்து அவரை மாநில அரசு திருப்பி அனுப்பி வைத்தது.
 
 
இது காஷ்மீர் டைம்ஸ்,  கிரேட்டர் காஷ்மீர் உள்ளிட்ட ஆங்கில பத்திர்க்கைகளில் முக்கிய செய்தியாக வெளியிடப்படிருந்ததை படித்தோம். மேலும் தெற்கு காஷ்மீரில் குல்காம் என்ற பகுதியில் ருக்கையா பானு என்ற காஷ்மீர் பெண்ணை இந்திய ராணுவத்தினர் கற்பழித்ததால் ஆங்காங்கே போராட்டங்களும், கல்வீச்சுகளும் நடைபெற்று கொண்டு இருந்தன.
 
காஷ்மீரின் முக்கிய தலைவர்களான செய்யது அலிஷா ஜிலானி, சபீர் உள்ளிட்டோர் வீட்டு காவலில் முடக்கப்பட்டார்கள் என்பதையும் அறிந்தோம்.
நாங்கள் வந்திருந்த சூழல், மிகவும் பதற்றமாக இருந்ததை உணர்ந்து கொண்டோம்.
 
அதே நேரம் காஷ்மீர்களிடம் நெருங்கி பழகி அவற்றை பேட்டிகளாக எடுத்து மக்கள் உரிமையில் வெளியிட வேண்டும் என்ற எங்கள் முடிவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இறைவன் இருக்கிறான் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையோடு ஸ்ரீநகரில் வலம் வர புறப்பட்டோம்.
 
எமது சந்திப்புகளையும், உரையாடல்களையும் கவனமாக கையாண்டு அவற்றை பேட்டிகளாக பதிவு செய்ய வேண்டுமென்று எங்களுக்குள் முடிவுஎடுத்து கொண்டோம். ஒரு உண்மை அறியும் குழுப்போலவே எங்களது அணுகுமுறைகள் இருந்தது.
 
நாங்கள் சந்தித்த ஸ்ரீநகர் மக்கள் எங்களுக்கு வித்தியாசமாக இருந்தார்கள். அவர்களது தோற்றம், ஆடைகள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆட்களைப்போலவே இருக்கிறார்கள் என வழக்கறிஞர் வாசுதேவன் கூறினார். அது தான் உண்மை. இனம் என்று பார்த்தால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழ்பவர்கள் பிராமணர்களாக இருந்து இஸ்லாத்தை தழுவியவர்கள் என்பது அறிவியல் மற்றும் வரலாற்று உண்மையாகும்.
 
நாங்கள் முதலில் சந்தித்த காஷ்மீரியரின் பெயர் ஆபித் அலி. இவர் ஒரு வணிகர்.
 
காஷ்மீர் பிரச்கனை குறித்து அவரோடு பேசினோம். சட்டென்று பொறுமை இழந்தவராய் பேசத் தொடங்கினார்.
 
1931& லிருந்து இப்பிரச்னை தொடங்கியது. 1948 &ல் பாகிஸ்தான் ஆதரவு பட்டாண்கள் காஷ்மீருக்குள் நுழைந்த போதுதான், மன்னர் கரண்சிங் இந்தியாவின் உதவியை நாடினார்.
 
காஷ்மீரை காப்பாற்றுகிறோம் என்று வந்த இந்திய ராணுவம் அப்படியே தங்கிவிட்டது. அது முதல் இந்தியாவின் ஆக்கிரமிப்பு தொடர்கிறது என்றவர் 1989 லிருந்துதான் ஆயுதம் தாங்கிய முஜாஹிதீன் (போராட்டக்காரர்கள்) குழுக்கள் உருவாகின.
 
அதுமுதல் 22  ஆண்டுகளாய் நாங்கள் சந்தித்துவரும் இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல. இங்கு ராணுவத்தின் ஆட்சிதான் நடக்கிறது எனலாம்.
 
1989லிருந்து இதுவரை 75 ஆயிரம் காஷ்மீரிகளை இந்தியா கொன்றுள்ளது. ஆனால் உண்மையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சம் என நாங்கள் கருதுகிறோம்.
 
இதனால் விதவைகளின் எண்ணிக்கையே 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அவர்களின் வாழ்க்கை மிகவும் பரிதாபமாக உள்ளது. பெற்றோரை இழந்த பிள்ளைகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தொடுகிறது. விசாரணை என்ற பெயரில் அரசுப் படைகள் பலரை இழுத்துச் சென்றிருக்கிறது. அவர்களில் பெரும்பாலோர் பல ஆண்டுகளாக என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இப்படி காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மட்டுமே 10 ஆயிரத்தை தாண்டுகிறது.
 
எத்தனையோ மனைவிகள் தங்கள் கணவர் வருவார் என்ற நம்பிக்கையாலும், பல தாய்மார்கள் தங்களை காப்பாற்ற தங்கள் பிள்ளைகள் வருவார்கள் என்ற நம்பிக்கையிலும், எத்தனையோ பிள்ளைகள் தங்கள் தந்தையை ஒருநாள் காண்போம் என்ற நம்பிக்கையிலும், பல சகோதரிகள் தங்கள் சகோதரர்கள் ஒருநாள் வருவார்கள் என்ற நம்பிக்கையிலும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
ஆபித் அலியின் வாக்குமூலம் எங்கள் அனைவரையும் உலுக்கியது.
 காஷ்மீரில் பிராமண பண்டிட்களும் கொல்லப் பட்டிருக்கிறார்களே என்ற அடுத்த கேள்வியை முன் வைத்தோம்.
 
அதிகபட்சமாக 500 பேர் கொல்லப்பட்டிருக்கக் கூடும். அவர்கள் எங்கள் சகோதரர்கள். அவர்கள் கொல்லப்பட்டிருக்கக் கூடாது. அதற்காக நாங்கள் வருந்துகிறோம்.
500 பண்டிட்டுகளின் மரணங்களை பெரிதுபடுத்தும் இந்திய ஊடகங்கள், 3 லட்சம் காஷ்மீரிகள் சொல்லப்பட்டதை ஏன் பேசுவதில்லை. அது எங்களை மிகவும் வேதனைப்படுத்துகிறது என்றவர், அகதிகளாக வெளியேறிய பண்டிட்டுகள் எப்போது வந்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்றார்.
எங்களுடைய முதல் நேர்காணல் மிகவும் வேதனையுடன் தொடர்ந்தது.
 
ஆபித் அலியை தொடர்ந்து, பிர்தௌஸ் என்பவரை சந்தித்தோம்.
இவர் மளிகை உள்ளிட்ட பல்வேறு வணிகங்களில் ஈடுபட்டு வருகிறார். எடுத்ததுமே வேகமாக பேசினார்.
 
எங்களின் இதயங்களை தொடக்கூடிய எந்த வேலைகளையும் இந்திய அரசு செய்வதில்லை. மாறாக எங்களை அதிகம் காயப்படுத்துகிறது என்றவர், காஷ்மீருக்கு கூடுதலாக வரிகளை விதித்து மக்களை வதைப்பது என்ன நியாயம்? என்றவர் இங்கு பெட்ரோல் 1 லிட்டர் 80 ரூபாய்க்கு விற்பது உங்களுக்கு தெரியுமா? என்றார்.
 
1989  முதல் 99 வரை இருபது வருடங்களில் 1850 நாட்கள் கடை அடைப்பிலும், வேலை நிறுத்தத்திலும் கழிந்து விட்டது. இப்படி இருந்தால் வியாபாரிகள் என்ன செய்ய முடியும்? என்றவர் எங்களை அழைத்து சென்று தனது கடையின் பின் பகுதியை காட்டினார்.
 
அதில் ஓட்டைகள் இருந்தன. இது என்ன தெரியுமா? என்றவர். ராணுவத்தினர் மொத்தமாக வருவார்கள். எங்கள் கடையில் சாமான்களை வாங்குவார்கள். பணம் கேட்டால் துப்பாக்கியால் சுடுவார்கள். அப்படி சுட்டதுதான் இந்த ஓட்டைகள் என்று விளக்கமளித்தார்.
 
எங்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.  பிறகு நாங்கள் காரில் ஏறி புகழ்பெற்ற ஸ்ரீநகரின் ஜாமியா மஸ்ஜிதுக்கு புறப்பட்டோம்.
 
எம். தமிமுன் அன்சாரி

தாங்கமுடியாத உற்சாகத்தால் டீ குடிக்க காசில்லை


பெங்களூரில் தண்ணி அடித்துவிட்டு குஷியாக இருக்க வந்த சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியரை ஒரு கும்பல் மயக்க மருந்து தெளித்துஅடித்து உதைத்துரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள லேப்டாப்ஐபோன்பணம்நகைகளைப் பறித்துவிட்டுரோட்டில் வீசிவிட்டுச் சென்றது.
சென்னையை சேர்ந்தவர் ராஜ் (25) ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை பெங்களூர் வந்தார். இரவு 11 மணிக்கு பெங்களூர் கலாசிபாளையம் பஸ் நிலையத்தில் வந்திறங்கினார். அவர் வந்ததேகுடும்பத்தாரிடம் இருந்து தூரமாக இருக்கவும்தண்ணி அடித்துவிட்டு ஜாலியாக இருக்கவுமே.
பஸ்சை விட்டு கீழே இறங்கியதும் நேராக ஒரு பாருக்கு சென்று மூக்கு முட்ட குடித்தார். இதையடுத்து லாட்ஜில் ரூம் போட நடந்து சென்ற அவரை 
பெங்களூர் மருத்துவக் கல்லூரி அருகே ஒரு கும்பல் வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டியது.
இதையடுத்து அவர் மீது மயக்க மருந்தை வீசி அவரை மயக்கமடைய வைத்தது. அதன் பிறகு நடந்தது எதுவும் ராஜுக்குத் தெரியவில்லை. மறுநாள் அதிகாலை மணிக்கு மயக்கம் தெளிந்து சுய நினைவுக்கு வந்த அவர் பசவனகுடி மேம்பாலம் அருகே நேஷனல் கல்லூரிக்கு பக்கத்தில் ரோடோரத்தில் கிடந்தார்.
அவரிடம் இருந்த லேப்டாப்ஐ போன்லேப்டாப்தங்க சங்கிலிபிரேஸ்லெட்மோதிரங்கள்ரூ. 20,000 பணம் உள்பட ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள நகை-பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அவர் பசவனகுடி போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுக்கச் செல்லவேஅவர்கள் உன்னை மயக்கப்படுத்தியது கலாசிபாளையம் என்பதால் அங்கே போய் புகார் கொடு என திருப்பி அனுப்பிவிட்டனர்.
அங்கு போனால்நீ மயங்கிக் கிடந்த இடம் பசவனகுடி. இதனால் அங்கே போ என மிரட்டினர். இதையடுத்து கடுப்பான ராஜ் பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தார்.
இதையடுத்து கமிஷனர் அலுவலக அதிகாரிகள் பசவனகுடி போலீஸ் இன்ஸ்பெக்டரை வரவழைத்து டோஸ் விட்டதோடுவழக்குப் பதிவு செய்ய வைத்தனர். கையில் ஒரு பைசா கூட இல்லாமல்டீ குடிக்கக் கூட வழி இல்லாமல்பசியால் தவித்த ராஜ் கண்ணீர் விட அதைக் கண்ட போலீஸ் அதிகாரிகள் அவருக்கு சென்னைக்கு பஸ் டிக்கெட் எடுத்துக் கொடுத்துகொஞ்சம் பணமும் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
ராஜ்.. இது தேவையா?!

சமச்சீர்க் கல்விக்காகப் போராடிய ஹனீஃபா என்ற மாணவர்


மிழகக் கல்வியாளர்களின் நாற்பது ஆண்டுக் கனவுநிறைவேறி இருக்கிறது. தடை பல கடந்து வெற்றிக்​கொடியை நாட்டி இருக் கிறதுசமச்சீர்க் கல்வித் திட்டம்! 
பலரும் இதற்காக முயன்று இருந்​தாலும், 'இவர் கள் இல்லாமல் இது சாத்தியம் இல்லை’ என்று சொல்லும் அளவுக்கு சில அமைப்புகள்தான் இதற்கு முக்கியக் காரணம்! இதில்பிரின்ஸ் கஜேந்திரபாபு என்ற தனி மனிதரின் போராட்டம் முக்கியமானது. 'பொதுப் பள்ளிக்கான மாநில மேடை’ எனும் அமைப்பின் மூலம்சமச்சீர்க் கல்விக்காகப் போராடி வருகிறார் இவர்.
தொலைபேசியிலும் நேரிலும் பலரின் பாராட்டு களில் நனைந்துகொண்டு இருந்த அவரை நாம் சந்தித்தபோது, ''மத்தியில் பி.ஜே.பி. ஆட்சியில் பாடத் திட்டங்களில் மதவாதக் கருத்துகளைச் சேர்த்துபிரச்னை உண்டானது. அடுத்து வந்த காங்கிரஸ் கூட்டணி அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன்சிங்அனைத்து மாநிலங்களின் பாடத் திட்டங்களையும் திருத்தியமைக்க உத்தரவிட்டார். 2005-ல் உருவாக்கப்பட்ட 'தேசிய பாடத் திட்டக் கொள்கையின்படிபுதிய பாடத்திட்டம் இருக்க​வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்தப் பணிக்காகஒவ்வொரு மாநிலத்துக்கும் தலா http://www.vikatan.com/images/rupee_symbol.png 10 லட்சத்தை தேசிய கல்வி ஆராய்ச்சிபயிற்சி நிறுவனம் (என்.சி.இ.ஆர்.டி) வழங்கியது. தமிழகத்திலும் 2006-ல் தொடங்கிய இந்தப் பணி முடிய மூன்று ஆண்டுகள் ஆனது.2009 அக்டோபரில் 'வரைவு பொதுப் பாடத்திட்டம்’ என இணையதளத்தில் இது வெளியிடப்பட்டது. இறுதியாகஎன்.சி.இ.ஆர்.டி-யின் பாடத்திட்டக் குழுவும் இதை ஆராய்ந்து, 'இது சரியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது’ என்று 2009 நவம்பர் 25-ல் அறிவித்தது. அடுத்த இரண்டாவது நாளில்,சமச்சீர்க் கல்விக்கான அவசரச் சட்டத்தை தி.மு.க. அரசு கொண்டுவந்தது. இதனால்தான் சமச்சீர்க் கல்வி தமிழகத்துக்கு வந்தது. கருணாநிதி கொண்டுவந்தார் என்பதற்காக எதிர்ப்பவர்கள் இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
2006-ல் இருந்து கல்வியாளர்களும் மாணவர் அமைப்பினரும் சமச்சீர்க் கல்விக்காகப் போராடினர்.2006 செப்டம்பரில் முத்துக்குமரன் குழு அமைக்கப்பட்டு, 2007 ஜூலையில் அறிக்கை தந்தது. அதை ஆராய விஜயகுமார் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியைக் கொண்டு குழு அமைக்கப்பட்டு... அதுவும் அறிக்கை தந்தது. ஆனால்தி.மு.க. அரசு சமச்சீர்க் கல்வி பற்றி வாய் திறக்கவே இல்லை. தமிழகக் கல்விக் குழு தயாரித்த 'பொதுப் பாடத் திட்டத்தை என்.சி.இ.ஆர்.டி. அங்கீகரித்தபின்புஅதை தி.மு.க. அரசும் அங்கீகரிக்கவேண்டிய கட்டம் வந்தபோதுதிடீரென சமச்சீர்க் கல்விக்கான அவசர சட்டத்தைக் கொண்டு​வந்தார்கள்

நவம்பர் 30-ம் தேதி கெசட்டில் வெளி​யிட்டு, 2010 பிப்ர​வரியில்தான் சட்டப் பேரவை மூலம் இந்த சட்டம் நிறைவேறியது. இதன்படி புத்தகத்தை அச்சடிக்க உத்தரவு பிறப்பித்த பிறகுதனியார் பள்ளிகள் தரப்பில் சமச்சீர் பாடத் திட்டத்தை எதிர்த்துநீதிமன்றம் சென்றனர்.
விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிரபாஸ்ரீதேவன் மற்றும் ஜனார்த்தன்ராஜா பெஞ்ச், 'சமச்சீர் பாடத் திட்டம் செல்லும். ஆனால்அந்தப் பாடத் திட்டத்தின்படி தனியார் பள்ளிகள் புத்தகங்களைத் தீர்மானித்துக் கொள்ளலாம்’ என்று தீர்ப்பளித்தது. அதே ஆண்டு செப்டம்பரில் உச்ச நீதிமன்றமும் இதை உறுதிசெய்தது. ஆனால்உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மாறாகஒரு சட்டம் கொண்டுவந்து... அதனால் இரண்டு மாதம் குழந்தைகள் மனச் சித்ரவதைக்கு உள்ளாகிஒரு வழியாக அதே நீதிமன்றத்தால்பொதுப் பாடத்திட்ட உரிமை மீண்டும் நிலைநாட்டப்பட்டு உள்ளது!''என்று முடித்தார் பிரின்ஸ்.
மார்க்சிஸ்ட் கட்சியின் இந்திய மாணவர் சங்கத்தினரும் (எஸ்.எஃப்.ஐ.) அடுத்​தடுத்து நடத்திய ஆர்ப்பாட்டங்கள் முக்கியமானவை. 2009 ஜூலை 14-ம் தேதிதலைமைச் செயலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் மீது போலீஸ் கடுமையான தாக்குதல் நடத்தியது. இதில் 30 பேர் படுகாயம் அடைந்​தனர்.
''இந்தத் தாக்குதலில், ஹனீஃபா என்ற மாண வருக்கு தலையில் படுகாயம்.மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுஉயிருக்கே ஆபத்து! மூன்று மாத சிகிச்சைக்குப் பிறகே உயிர்பிழைத்தார். சமச்சீர்க் கல்வியைக் கொண்டுவந்ததாக இப்போது தம்பட்டம் அடித்துக்கொள்ளும் தி.மு.க. ஆட்சியில்அதற்காகப் போராடிய மாணவனுக்குக் கிடைத்த பரிசு அப்படி!'' என்றார்,எஸ்.எஃப்.ஐ. மாநிலச் செயலாளர் ராஜ்மோகன்.
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (ஆர்.எஸ்.ஒய்.எஃப்) ஆகிய அமைப்புகள் செய்த போராட்டங்கள் ரொம்பவும் அதிரடி!
''எல்லோருக்கும் பொதுவான பாடத்​திட்டம் கூடாது என்பது சமூக அநீதி. உலகமயமாக்கலுக்கு ஏற்ப பொதுப் பாடத்திட்டம் இல்லை என்கிறது அ.தி.மு.க. அரசு. எனவே, 'மீண்டும் குலக் கல்வியைக் கொண்டுவரும் ஜெ. அரசின் முயற்சியை முறியடிப்போம்’ என்றுதான் களத்தில் இறங்கினோம். சென்னையில் 600 பேர் மறியல் செய்து, 63 பேர் சிறையில் அடைபட்டோம். கடலூர்திருச்சி,மதுரை என பல ஊர்களிலும் போராடியவர்களுக்கு ஒரு வாரத்துக்கும் மேல் சிறை. கடலூரில் 15வயது மாணவர் ஒருவரை 21 நாள் சிறார் சிறையில் அடைத்தது இந்த அரசு!'' என்றார்இந்த அமைப்பின் மாநில அமைப்பாளர் கணேசன்.
தி.மு.க.அ.தி.மு.க. கட்சிகளின் அரசியல் லாபநட்டக் கணக்குகளுக்கு அப்பால்தமிழ்ச் சமூகத்தின் சமநீதிக்கான ஒரு படிக்கல்லைத் தொட்டிருக்கும் இந்தத் தருணம்விடாப்பிடி போராட்டங்களுக்குக் கிடைத்த அர்த்தமுள்ள ஒரு பரிசுதான்!                                  நன்றி ஜூனியர் விகடன்


Friday, August 26, 2011

என்னுடைய பாவங்களை மன்னிப்பாயாக!!


அல்லாஹும்ம இன்னக்க அஃப்வன்
 துஹிப்புல்
 அஃப்வ
 பஅஃபு அன்னி

பொருள் :

 யா அல்லாஹ்!
 நீயே பாவங்களை மன்னிக்கக்கூடயவன்.
 மன்னிப்பதை விரும்புபவன்.
 (ஆகவே) என்னுடைய பாவங்களை மன்னிப்பாயாக!!

Tuesday, August 23, 2011

உணவு அளியுங்கள்


அவர்கள் இரவில் மிகவும் சொற்ப 
நேரமேயன்றி 

  தூங்கமாட்டார்கள். 
இரவின் கடைசி நேரங்களில்பாவமன்னிப்புத் தேடுவார்கள்"



(அல்குர்ஆன் - 51:17,18)

"ஸலாத்தை பரப்புங்கள், உணவு அளியுங்கள், உறவுகளை ஒட்டி வாழுங்கள், 
மக்கள் தூங்கும்போது தொழுங்கள்,நிம்மதியாக சொர்க்கம் செல்வீர்கள்"



அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸலாம் ( ரலி)
நூல் : அஹமத் 24193

Sunday, August 21, 2011

இதய இரகசியங்களை அறிபவன்


அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்து இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்; அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது; மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கிறானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை.

வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வுத்தஆலாவைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்; மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்தஆலாவின் உண்மை அடியாரும் இறுதி தூதரும் ஆவார்கள் எனவும் சாட்சி கூறுகிறேன். அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நபிகள் நாயம் (ஸல்) அவர்களின் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள், தோழர்கள் மீதும், நம் மீதும் மற்றும் கியாம நாள் வரை அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றக் கூடிய முஸ்லிம்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக. ஆமீன்.

அன்பான சகோதர சகோதரிகளே, அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்: -
‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ (அல்குர்ஆன் 4:116)

இந்த வசனத்தில் அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான் என்று கூறியிருப்பதை சற்று கவனத்துடன் ஆராயவேண்டும். ஏனென்றால் இறைவனின் மன்னிப்பே கிடைக்காத இணைவைப்பது என்றால் என்ன என்பதை நாம் அறிந்து கொண்டு அவற்றிலிருந்து முற்றிலுமாக தவிர்ந்து இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகிறது.
இணைவைக்கும் ஒருவருக்கு அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்காததோடு மட்டுமில்லாமல் அவர் தம்முடைய வாழ்நாளில் செய்த அனைத்து நல்லறங்களும் அழிந்து நிரந்தர நரகத்திற்கு வழிவகுக்கும்.

1) இணைவைத்தலின் தீமைகள்: -
  1. ஒருவர் தம் வாழ்நாளில் செய்த அனைத்து நல்லறங்களும் பாழாகிவிடும்
  2. இறைவன் இணைவைத்தலைத் தவிர ஏனைய பாவங்களைத் தான் நாடியோருக்கு மன்னிப்பான்
  3. இணை வைத்தவனின் கதி மிகவும் மோசமானது
  4. இறைவனுக்கு இணை கற்பித்தால் நிரந்தர நரகம்.
நல்லமல்களை அழித்துவிடும் ஷிர்க்: -

அல்லாஹ் கூறுகிறான்: -

இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; (பின்னர்) அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும். (அல்குர்ஆன் 6:88)

அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், ‘நீவிர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்’ (என்பதுவேயாகும்). ஆகவே, நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! மேலும், அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில் நின்றும் இருப்பீராக!(அல்குர்ஆன் 39:65 & 66)

இணைவைத்தலைத் தவிர ஏனைய பாவங்களைத் தான் நாடியோருக்கு மன்னிப்பான்: -

அல்லாஹ் கூறுகிறான்: -

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். (அல்குர்ஆன் 4:48 )
இணை வைத்தவனின் கதி: -

அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான். (அல்குர்ஆன் 22:31)

இறைவனுக்கு இணை கற்பித்தால் நிரந்தர நரகம்.

அல்லாஹ் கூறுகிறான்: -

“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )
இந்த அளவிற்கு படுபயங்கரமான இணைவைத்தல் என்பது பற்றி நாம் முழுவதுமாக அறிந்திருக்க வில்லையானால் அவற்றிலிருந்நு பரிபூரணமாக தவிர்திருப்பது என்பது இயலாத காரியம். எனவே ஷிர்க் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை என்பவை பற்றி இந்த சிறிய ஆய்வுக் கட்டுரையில் ஆராய்வோம்.
இன்று நமது சமுதாயத்தில் இணைவைப்பது (ஷிர்க்) என்றால் என்ன என்று கேட்டால் மிக எளிதாக கிடைக்கும் பதில் ‘சிலைகளை வணங்குவது’ என்றே நம்மில் பெரும்பாலோர் கூறுவர். இவ்வாறு இவர்கள் கூறுவதற்கு காரணம் இணை வைப்பது என்றால் என்ன என்பதைப் பற்றிய அறியாமையே ஆகும்.
2) ஷிர்க் என்றால் என்ன?

ஷிர்க் என்பது தவ்ஹீத் (அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல்) என்பதற்கு நேர்மாற்றமான அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தலாகும்.
அதாவது ஷிர்க் என்பது,
- அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அல்லாத பிறருக்கு செய்வது
- அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய ஆற்றல்களில் சிலவற்றை அல்லாஹ் அல்லாத பிறருக்கும் இருப்பதாக கருதுவது
ஆகியவையாகும்.
ஷிர்கின் வகைகள்: -

ஷிர்கில் மூன்று வகைகள் உள்ளன. அவைகளாவன: -
  1. பெரிய ஷிர்க்
  2. சிறிய ஷிர்க்
  3. மறைமுக ஷிர்க்
பெரிய ஷிர்க் என்றால் என்ன?

அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யப்படவேண்டிய வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அல்லாதவைகளுக்கு செய்வது பெரிய ஷிர்க் ஆகும்.

சிறிய ஷிர்க் என்றால் என்ன?


அல்லாஹ்வுக்காக செய்யவேண்டும் என்ற நோக்கமில்லாமல் பிறர் பார்த்து பாராட்ட வேண்டும் என்று கருதி வணங்குவது அல்லது
பிறர் தம்மை தவறாக நினைத்து விடக் கூடாது என்பதற்காகவோ அல்லாஹ்வை வணங்குவது
இவ்வாறு வணக்கம் புரிவது சிறிய ஷிர்க் ஆகும்.
நபி (ஸல்) அவர்கள் சிறிய ஷிர்க் குறித்து மக்களை எச்சரித்துள்ளார்கள்.

மறைவான ஷிர்க் என்றால் என்ன?

மறைவான ஷிர்க் என்பது அல்லாஹ் நம்மீது விதித்துள்ள கட்டளைகளை ஏற்று அதன் மீது திருப்தி கொண்டு அதன்படி செயல்படாமல் அவற்றை அலட்சியம் செய்வதாகும்.

3) ஷிர்குல் அக்பர் ஒரு விளக்கம்: -


இந்த சிறிய ஆய்வுக்கட்டுரையில் ஷிர்குல் அக்பர் என்று சொல்லப்படக்கூடிய மாபெரும் இணைவைத்தல் பற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் ஆராய்வோம்.
ஷிர்குல் அக்பர் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யப்படவேண்டிய வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வுக்கு அல்லாதவர்களுக்கு செய்வதும், அல்லாஹ்வுடைய பண்புகளை ஆற்றல்களை பிறருக்கு இருப்பதாக கருதுவதும் என பார்த்தோம்.

நம்முடைய சமுதாயத்தில் உள்ளவர்களில் பலர் இஸ்லாத்தின் மூல மந்திரமான ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்பதன் பொருள் அறியாமல் தான் இந்த ஷிர்க் என்ற கொடிய பாவத்தில் சிக்கி உழல்கின்றனர். வணக்கம் என்றால் என்ன என்று கேட்டால் அவர்கள் கூறுவது தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும் ஹஜ் என்பார்கள். வணக்கம் என்பது இவைகள் மட்டுமன்று. அல்லாஹ்வும் அவனது தூதரும் (ஸல்) எவைகளையெல்லாம் அல்லாஹ்வுக்கு மாத்திரம் செய்ய வேண்டுமென்று கட்டளையிட்டு இருக்கிறார்களோ அவைகள் அனைத்தும் வணக்கமாகும். அவற்றை அல்லாஹ்வை விடுத்து மற்றவருக்கு செய்தால் அவைகளும் ஷிர்கின் வகையைச் சேர்ந்ததாகும்.

உதாரணமாக பின்வரும் அனைத்தும் வணக்கத்தின் வகைகளாகும். அவைகளை அல்லாஹ்வுக்கு மட்டுமே நாம் செய்ய வேண்டும்.
  • துஆ (பிரார்த்தனை) செய்தல்
  • ருகூவு / சஜ்தா செய்தல்
  • அழைத்து உதவி தேடுதல்
  • பாதுகாவல் தேடுதல்
  • நேர்ச்சை செய்தல்
  • தவாபு செய்தல்
  • சத்தியம் செய்தல்
  • குர்பானி கொடுத்தல்
  • ஆதரவு / தவக்குல் வைத்தல்
  • அல்லாஹ்வைப் போல் பிறரை நேசித்தல்
ஒருவர் மேற்கண்ட அனைத்து செயல்களுமே வணக்கத்தின் வகைகள் என்று அறிந்துக் கொள்வாராயின் இன்ஷா அல்லாஹ் அவர் இந்த வணக்க முறைகளை அல்லாஹ் அல்லாதவர்களுக்கு செய்வதிலிருந்தும் தவிர்ந்துக் கொள்வார். ஆனால் இவைகளும் வணக்கமே என்று புரிந்துக் கொள்வதில் தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விடுகின்றனர்.

மேலும் ஒருவர் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக்கூடிய பண்புகள் மற்றும் ஆற்றல்கள் யாவை என அறிந்துக் கொள்வராயின் அவற்றில் இணை வைப்பதிலிருந்தும் தவிர்ந்துக் கொள்வார் இன்ஷா அல்லாஹ்.

இந்த சிறிய ஆய்வுக் கட்டுரையில் ஒரு உதாரணம் மூலம் எவ்வாறெல்லாம் மக்கள் அல்லாஹ்வுக்கு அறிந்தோ அல்லது அறியாமையினாலோ இணை கற்பிக்கின்றார்கள் என்பதைப் பார்ப்போம்.

உதாரணம் -

ஒருவர் சிங்கப்பூரிலிருந்து கொண்டு அல்லது உலகின் வேறு எந்த மூலையில் இருந்துக் கொண்டோ நாகூரில் அடக்கமாகியிருப்பதாக் கூறப்படும் ஷாகுல் ஹமீது வலியுல்லாஹ்விடம் யா ஷாகுல் ஹமீது பாதுஷாவே என்னுடைய இன்ன தேவையை நீங்கள் நிறைவேற்றித் தந்தால் நான் தங்களின் இடத்திற்கு வருகை தந்து தங்களுக்கு காணிக்கை செலுத்துகிறேன் என நேர்ச்சை செய்வதாக வைத்துக் கொள்வோம்.
இந்த இடத்தில் நாம் இவருடைய வேண்டுதலை ஆய்வு செய்தோமேயானால் இவர் பல வகைகளில் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவராகிறார். அவைகளாளாவன: 
-
1) வணக்க வழிபாடுகளில் இணை வைப்பது: -

அல்லாஹ்விடம் மாத்திரமே செய்ய வேண்டிய பிரார்த்தனையை, துஆவை ஷாகுல் ஹமீது அவுலியாவிடம் செய்தல்
அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்ய வேண்டிய நேர்ச்சையை ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கு செய்தல்

2) அல்லாஹ்வுடைய பண்புகளில், ஆற்றல்களில் இணை வைப்பது: -

அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்புகளாகிய எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் சக்தி உடையவன் (அஸ் ஸமீவுன்) மற்றும் ஒரே நேரத்தில் அனைத்தையும் பார்ப்பவன் (பஷீரன்) என்ற பண்புகள், ஆற்றல்கள் ஷாகுல் ஹமீது பாதுஷாவுக்கும் இருப்பதாகக் கருதுவது
அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்பாகிய ஒருவரின் இதயத்தில் உள்ள இரகசியத்தை அறியும் சக்தி உடையவன் என்ற பண்பை, ஆற்றலை ஷாகுல் ஹமீது பாதுஷாவுக்கும் இருப்பதாகக் கருதி அவரும் மனிதர்களின் இதயங்களிலுள்ளவற்றையெல்லாம் அறிகிறார் என நம்புவது

அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்பாகிய பிரார்த்தனையை செவிமெடுத்து அதை நிறைவேற்றித் தரும் ஆற்றல் ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கும் இருப்பதாக கருதுவது.
சகோதர, சகோதரிகளே இங்கு நாம் கவனமாக சிந்திக்க வேண்டும். ஏனெனில் அறிந்தோ அல்லது அறியாமலோ சர்வ சாதாரணமாக நம்மில் சிலர் செய்கின்ற இந்த வேண்டுதலில் இத்தனை வகையான ஷிர்க் நிறைந்துள்ளது. ஒருவர் மேற்கண்ட உதாரணத்தில் உள்ள பிரார்த்தனை (துஆ) செய்தல் மற்றும் நேர்ச்சை செய்தல் போன்ற வணக்கங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யப்பட வேண்டியவை என்றும், மேற்கண்ட உதாரணத்தில் கூறப்பட்ட பண்புகள் அல்லாஹ்வுக்கு மற்றுமே உரித்தானது என்றும் உணர்ந்துக் கொண்டால் அவர் இன்ஷா அல்லாஹ் இத்தகைய இணை வைத்தல்களிலிருந்து தவிர்ந்துக் கொள்வார். இவற்றை குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் ஒளியில் ஆராய்வோம்.

துஆ (பிரார்த்தனை) செய்வதும் ஒரு வணக்கமே!: -

அல்லாஹ் கூறுகிறான்: -

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்’ என்று கூறுவீராக (அல் குர்ஆன் 2:186)
உங்கள் இறைவன் கூறுகிறான்: ‘என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள். (அல் குர்ஆன் 40:60)

மேலும் அல் குர்ஆனின் வசனங்கள் 2:286, 7:55, 18:28, 35:14, 72:18 அனைத்தும் அல்லாஹ்விடமே பிரார்த்தனை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

பிரார்த்தனை (துஆ) ஓர் வணக்கமாகும். என்னை அழையுங்கள். நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன் என்று உங்கள் இறைவன் கூறுகிறான்.(அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் -ரலி, நூல்:அபூதாவூத், திர்மிதி)

மேற்கண்ட வசனங்கள் மற்றும் நபி மொழியில் இருந்து நாம் பெறும் தெளிவுகள் யாவை எனில்: -
  • துஆ ஒரு வணக்கமாகும்.
  • அல்லாஹ் சமீபமாக இருக்கிறான்.
  • பிரார்த்தனைக்கு விடையளிக்கிறான்.
  • அல்லாஹ்விடமே பிரார்த்திக்க (துஆ) செய்ய வேண்டும்
எனவே மேற்கண்ட குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் நமது தேவைகளை அல்லாஹ்விடமே பிரார்த்திக்க வேண்டும். ஷாகுல் ஹமீது அவுலியாவிடமோ அல்லது வேறு எந்த வலியிடமோ, நபியிடமோ பிரார்த்தித்தால் அது ஷிர்க் எனப்படும் மன்னிக்கபடாத மாபெரும் பாவமாகும்.

நேர்ச்சை செய்வதும் ஒரு வணக்கமேயாகும்: -

நேர்ச்சை செய்வது ஒரு வணக்கம் என்பதற்கு பின்வரும் குர்ஆன் வசனங்கள் சான்றுகளாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: -

இன்னும், செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான்; அன்றியும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர். (அல் குர்ஆன் 2:270)
அவர்கள் தாம் (தங்கள்) நேர்ச்சைகளை நிறை வேற்றி வந்தார்கள்; (கியாம) நாளை அவர்கள் அஞ்சி வந்தார்கள். அதன் தீங்கு (எங்கும்) பரவியிருக்கும். (அல் குர்ஆன் 76:7)

எனவே மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் நேர்ச்சை என்பதுவும் ஒரு வணக்கமே. அதை அல்லஹ்வுக்கு மாத்திரமே செய்ய வேண்டும். அதைவிடுத்து ஷாகுல் ஹமீது அவுலியா மற்றும் இன்னும் பிற அவுலியாவுக்குச் செய்தோமேயானால் அது ஷிர்க் என்னும் இணை வைத்தலைச் சேரும்.

எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் சக்தி உடையவன் அல்லாஹ் மட்டுமே: -
ஒரே நேரத்தில் அனைத்தையும் பார்ப்பவன் அல்லாஹ் மட்டுமே: -


திருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னுடைய பண்புகளில் ஒன்றாக அஸ் ஸமீவுன் என கூறுகிறான். இதற்கு ஒருவர் எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும், எத்தகையை சூழலில் இருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் வல்லமை, ஆற்றல் பெற்றவன் என பொருள்படும். மேலும் ஒரே நேரத்தில் பல கோடி நபர்கள் அழைத்தாலும் அவர்களின் அழைப்பையும் கேட்கக் கூடியவன் எனவும் பொருள்படும். இந்த பண்பு, ஆற்றல் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரிடமும் இல்லை.
மேலும் திருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னுடைய பண்புகளில் ஒன்றாக பஷீரன் என கூறுகிறான். இதற்கு அல்லாஹ் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடியவன் என பொருள்படும். அதாவது ஒருவர் எங்கிருந்துக் கொண்டும் மேலும் எத்தகைய சூழலில் இருந்துக் கொண்டும் அழைத்தாலும் அவரைப் பார்க்கக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. அதுமட்டுமல்லாமல் அவன் அவனுடைய படைப்பினங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடிய ஆற்றல் உள்ளவனாகவும் இருக்கிறான். இந்த ஆற்றல் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும் இல்லை.

யாராவது ஒருவர் தாம் சிங்கப்பூரிலிருந்து ஷாகுல் ஹமீது வலியுல்லாஹ்வை அழைக்கும் போதும், அதே நேரத்தில் உலகில் வேறு எந்த இடத்திலிருந்துக் கொண்டும் அழைக்கக் கூடிய பல்லாயிரக்கணக்காணோர்களைப் பார்த்து அவர்களின் அழைப்பைச் செவிமெடுக்கிறார் என நம்புவது அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய அஸ் ஸமீவுன் மற்றும் பஷீரன் என்ற நாமங்களை, பண்புகளை இறைவனல்லாத ஷாகுல் ஹமீது அவுலியாக்கு இணை கற்பிப்பது போலாகும்.

அவர் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் கேட்கும் தன்மையையும் (அஸ் ஸமீவுன்) மற்றும் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பார்க்கக்கூடியவன் (பஷீரன்) என்ற தன்மையையும் அல்லாஹ்வுக்கு மட்டுமல்லாமல் ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கும் இருப்பதாக நம்மி அல்லாஹ்வின் அந்தப் பண்புகளில், ஆற்றல்களில் இணை வைத்தவராவார்.
அல்லாஹ் கூறுகிறான்: -

“வரேனும் இவ்வுலகின் பலனை(மட்டும்) அடைய விரும்பினால், “அல்லாஹ்விடம் இவ்வுலகப்பலனும், மறுவுலகப்பலனும் உள்ளன. அல்லாஹ் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.” (அல் குர்ஆன் 4:134)

இதய இரகசியங்களை அறிபவன் அல்லாஹ்வே: -

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: -

மேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள், அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் – நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன் (அல்குர்ஆன் 67:13)
நம் மனதில் உள்ள நம்முடைய தேவைகளை அல்லது எண்ணங்களை நாம் வெளியே சொன்னால் தவிர மற்றவர்களால் அறிந்து கொள்ள இயலாது என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் நம்மைப் படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ் மட்டும் நாம் மனதிற்குள் நினைப்பதையும் வெளிப்படையாகப் பேசுவதையும் அறிகிறான்.
அல்லாஹ் கூறுகிறான்: -

அன்றியும், அல்லாஹ் நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நீங்கள் பகிரங்கப்படுத்துவதையும் அறிகிறான். (அல் குர்ஆன் 16:19)
வெளிப்படையாக (நீங்கள் பேசும்) பேச்சையும் அவன் நிச்சயமாக அறிகிறான்; நீங்கள் (இதயத்தில்) மறைத்து வைப்பதையும் அவன் (நிச்சயமாக) அறிகிறான்(அல் குர்ஆன் 21:110)
மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில்: -
  • உள்ளங்களில் மறைத்து வைப்பதை அறிபவனும்,
  • இதயங்களிலுள்ள இரகசியத்தை அறிபவனும்,
  • மனிதர்களின் மனதில் உள்ள தேவைகளை அறிபவனும்
அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பது உறுதியாகிறது. ஆனால் ஒருவர் இந்தப் பண்புகள், ஆற்றல்கள் ஷாகுல் ஹமீது அவுலியாவிற்கும் உண்டு அதனால் அவர் சிங்ப்பூரிலிந்து கேட்கும் அவரது தேவைகளை அல்லது அவருடைய மனதில் எண்ணியிருக்கும் நாட்டங்களை ஷாகுல் ஹமீது அவுலியா நிறைவேற்றித் தருகிறார் என நம்பிக்கை கொண்டு அதன்படி செயல்படுவாராயின் நிச்சயமாக அவர் அல்லாஹ், தனக்கு மட்டுமே இருக்கக் கூடியதாக கூறும் அந்தப் பண்புகளை, ஆற்றல்களை அவர் ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கும் பங்கிடுவதன் மூலம் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவராக கருதப்படுவார்.

இவ்வாறு அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறுகிறான்: -
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி அவர்கள் எதை (நாயனென) அழைக்கிறார்களோ, அதை அவன் அறிகிறான் – இன்னும் அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன். (அல் குர்ஆன் 29:42)

மேலும், இதய இரகசியங்களை அறிந்தவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று பல வசனங்கள் கூறுகின்றன. இது பற்றிய விளக்கத்தை ‘இதய இரகசியத்தை அறிபவன் அல்லாஹ்வே’ என்ற தலைப்பில் பார்க்கவும்.

பிரார்த்தனைக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் மட்டுமே: -

நாம் எங்கிருந்துக் கொண்டு துஆ (பிரார்த்தனை) கேட்டாலும், எத்தகைய சூழ்நிலைகளில் இருந்துக் கொண்டு அழைத்தாலும் நம்முடைய அழைப்பச் செவியேற்று அதற்கு பதிலளிப்பவன், அந்த தேவைகளை நிறைவேற்றுபவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.

அல்லாஹ் கூறுகிறான்: -

உங்கள் இறைவன் கூறுகிறான்: ‘என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.’ (அல் குர்ஆன் 40:60)

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்’ என்று கூறுவீராக. (அல் குர்ஆன் 2:186)
‘உங்கள் இணை (தெய்வங்)களை அழையுங்கள்’ என்று (அவர்களுக்குச்) சொல்லப்படும். அவர்களை இவர்கள் அழைப்பார்கள்; ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்கமாட்டார்கள்; மேலும், அவர்கள் வேதனையைக் காண்பார்கள். அவர்கள் நேர்வழியில் சென்றிருந்தால் (இந்நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்). (அல் குர்ஆன் 28:64)

நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்கார்; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள்; கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள்.(அல் குர்ஆன் 35:14)

உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப் போரின் உதாரணம்;) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது; (இவன் அள்ளாது) அது வாயை அடைந்து விடாது – இன்னும் காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை. (அல் குர்ஆன் 13:14)

‘எனக்கு இணையானவர்கள் என எவர்களை நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்களை நீங்கள் அழையுங்கள்’ என்று அவன் கூறக்கூடிய நாளில் இவர்கள் அவர்களை அழைப்பார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள்; இன்னும் அவர்களுக்கிடையே நாசத்தை நாம் ஏற்படுத்துவோம்.’ (அல் குர்ஆன் 18:52)

எனவே எனதருமை சகோதர சகோதரிகளே மேற்காணும் 
வசனங்களின் மூலம் நாம் பெறும் படிப்பினைகளப் பற்றி சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்த வசனங்களின் மூலம் நாம் பெறும் தெளிவுகள் யாவை எனில்: -

  • பிரார்த்திப்பவரின் பிரார்த்தனைக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் மட்டுமே
  • அல்லாஹ்விடம் மாத்திரமே பிரார்த்தனை செய்யவேண்டும்
  • அல்லாஹ்வைத்தவிர மற்றவர்களிடம் பிரார்த்தனை செய்தால் அவர்களால் அந்தப் பிரார்த்தனையைச் செவியேற்க இயலாது.
  • கியாம நாள் வரை அவர்களை அழைத்தாலும் அவர்களால் பதிலளிக்க இயலாது
  • கியாம நானில் அல்லாஹ்வுக்கு இணை வைத்ததை அவர்கள் நிராகரித்து விடுவார்கள்.
  • ல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்பவருக்குத்தான் அல்லாஹ் நேர்வழி காட்டுவான்.
எனவே மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் ஒருவர் பிரார்த்தனைக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் மட்டுமே என நம்பிக்கை கொண்டு அவனிடமே பிரார்த்தனை செய்ய வேண்டும். ஆனால் ஷாகுல் ஹமீது அவுலியாவும் நம்முடைய பிரார்த்தனையைச் செவிமெடுத்து நமக்கு பதிலளித்து நம்முடைய தேவைகளைப் பெற்றுத்தருகிறார் என நம்பிக்கைக் கொண்டால் அது ஷிர்க் என்னும் இணை வைத்தலைத் தவிர வேறொன்றுமில்லை.




Saturday, August 20, 2011

இருவரும் சமரசத்திற்கு வரும் வரை

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

சுவர்கத்தின் கதவுகள் திங்கட்கிழமையும், வியாழக்கிழமையும் திறந்து வைக்கப்படும். தனது சகோதரனுடன் பகைமை பாராட்டுபவனைத் தவிர அல்லாஹ்விற்கு இணை கற்பிக்காத அனைவரும் மன்னிக்கப்படுவார்கள். (பகைமை பாராட்டும் சகோதரர்களைப் பற்றி பின்வருமாறு மூன்று முறை சொல்லப்படும்). அவர்கள் இருவரும் சமரசத்திற்கு வரும் வரை (மன்னிப்பை) தாமதப்படுத்துங்கள். அவர்கள் இருவரும் சமரசத்திற்கு வரும்வரை (மன்னிப்பை) தாமதப்படுத்துங்கள். அவர்கள் இருவரும் சமரசத்திற்கு வரும்வரை (மன்னிப்பை) தாமதப்படுத்துங்கள். 



நூல்: முஸ்லிம், திர்மிதி.

இருநூற்றைம்பது ரூபாயில் ஒருமாத ஜீவாதாரம்

அதிரையிலிருந்து படுக்கோட்டைக்கு ஒருமுறை ஆட்டோவில் சென்றுவர செலவளிக்கும் தொகைதான் ஆகும்! இருநூற்றைம்பது ரூபாயில் ஓர் ஏழையின் ஒருமாத ஜீவாதாரத் தேவைகள் ஓரளவு நிறைவேற்றப்படுகிறது என்றால் நம்புவீர்களா? ஆம்! நம்பித்தான் ஆகவேண்டும். அதிரை பைத்துல்மால் கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக இதை சாத்தியப்படுத்தி வருகிறது. நமதூரில் சுமார் 50 ஏழைகளை அடையாளம் கண்டு, மாதந்தோறும் தலா ரூ.250 வீதம் உதவித்தொகை வழங்கி அவர்களின் அத்தியாவசிய ஜீவாதாரத் தேவையை ஓரளவு நிறைவு செய்து வருகிறது. 

பெரும்பாலும் நோன்பு காலங்களில் தானதர்மங்கள் நிரம்பி, நமதூர் மட்டுமின்றி அக்கம்பக்க ஊர்களிலிருந்தும் ஜகாத் மற்றும் ஃபித்ரா தர்மங்களைப்பெறுவதற்காக வருகின்றனர். அவர்களில் எத்தனைபேர் உண்மையிலேயே ஏழை அல்லது ஜகாத் பெறுவதற்குத் தகுதியுள்ளவர்கள் என்பது அனேகருக்குத் தெரியாது. அதிரை பைத்துல்மால் முஹல்லாவாரியாக பொறுப்புதாரிகளை நியமித்து, உண்மையிலேயே தருமம் பெறுவதற்குத் தகுதியானவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் சுயமரியாதைக்கும் கண்ணியத்திற்கும் எவ்வகையிலும் இடையூறு ஏற்படாதபடி அவர்களுக்கான தானதர்மங்களைச் செய்து வருகிறது. 

ஒருமுறை கைத்தொலைபேசிக்கு ரீசார்ஜ் செய்வதைக் குறைத்து, ரூ.250 ஐ பைத்துல்மாலுக்குச் செலுத்தினால், ஓர் ஏழையின் ஒருமாதத்திற்கான குறைந்தபட்ச அடிப்படை உணவுக்கு இது உதவுகிறது. பட்டுக்கோட்டைக்கு ஆட்டோவில் செல்லாமல், ஒருமுறை பேருந்தில் செல்வதன்மூலம், அதில் மிச்சப்படும் தொகையை தர்மமாக வழங்கி மேற்சொன்னபடி உதவலாம். இப்படியாக,நம் செலவுகளை மிச்சப்படுத்துவதன்மூலம் மிஞ்சும் தொகையை மாதம் ஒருமுறை மட்டும் வழங்கினால் இன்ஷா அல்லாஹ் நமதூரில் உண்ண உணவன்றி வாழும் ஏழைகளே இல்லை என்ற நிலையை உருவாக்கலாம். 

அதிரை பைத்துல்மாலின் நிர்வாகிகளைச் சந்தித்தோ அல்லது abmchq@gmail.com என்ற முகவரிக்கு மின்மடலுக்கு எழ்தியோ, குறைந்த செலவில் நிறைந்த நன்மை பயக்கும் பைத்துல்மாலின் பல்வேறு அளவிலான உதவிகளில் உங்களையும் இணைத்துக் கொள்ளலாமே! 

இந்த வருடம் ரமலான் பிறை இன்னும் 9-10 மட்டுமே இருக்கக்கூடும். உங்கள் தானதர்மங்களை அதிரை பைத்துல்மாலுக்குச் செலுத்தி விட்டீர்களா? இந்த மாதத்தின் செலவுகளில் அதிரை பைத்துல்மாலுக்கும் ஓர் பகுதியை ஒதுக்கி,பன்மடங்கு நன்மைகளைக் கொள்ளையடிக்கும் இந்த மாதத்தை பயனுள்ளதாக்கிக் கொள்ளலாமே!

அன்புள்ள அதிரை வலைப்பூ உரிமையாளர்களே! நடத்துனர்களே! அதிரை பைத்துல்மாலுக்கு உதவிகோரும் இந்த அறிவிப்பை உங்கள் தளத்திலும் வெளியிட்டு உதவிவிடுவீர். ஈருலக வாழ்க்கையையும் வெற்றியாக்கித் தருவதற்கு அல்லாஹ் போதுமானவன்.

Saturday, August 13, 2011

அல் குர்ஆனிய சமூகத்தை நோக்கி..!


அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா? (அல்குர்ஆன் 47:24)
15 நூற்றாண்டுகளுக்கு முன்னர் இப்பிரபஞ்சத்தில் தான்றோன்றித் தனமாகவும், நரக விளிம்பிலும் வாழ்ந்து கொண்டிருந்த ஜாஹிலிய சமூகத்தில்தான் புனித வேதமாகிய அல்குர்ஆனோடு முஹம்மது நபி எனும் இறைத் தூதர் அனுப்பப்படுகின்றார்கள். அச்சமூகம் இலக்கிய நயத்திலும், அறிவியலிலும் துறை போனவர்களாக இருந்தும் கூட அவர்களை அல்குர்ஆன் (ஜாஹிலிய) ‘அறிவிலி சமூகம்’ என வர்ணிக்கின்றது.


இதற்கு பிரதான காரணம், அவர்களிடத்தில் அறிவு இருந்தும் அதனை எவ்வாறு செயற்படுத்த வேண்டுமென்ற அறிவார்ந்த நுட்பம் இருக்கவில்லை. அத்தோடு பெண்களை சந்தைகளில் விலை பேசப்படுகின்ற போதைப் பொருள்களாகவும், பஞ்சமா பாதகங்களை தங்களது இயல்பியற் குணங்களாகவும் கொண்டிருந்தனர். மொத்தத்தில் மனிதத்துவத்திற்கு அப்பாற்பட்ட ஒரு நிலையில் வாழ்ந்து வந்தனர் என்று சொன்னாலும் அதனை மறுப்பதற்கு யாருமில்லை எனலாம்.
இத்தகைய ஒரு சமூகத்தில்தான் முஸ்லிம்களின் சட்ட யாப்பாகிய அல்குர்ஆன் இறக்கியருளப்படுகின்றது. இலக்கிய நயத்தில் விற்பன்னர்களாக திகழ்ந்த பெரும் இலக்கிய வாதிகளையெல்லாம் பிரமிக்க வைக்குமளவுக்கு அல்குர்ஆனின் இலக்கிய நடை அமைந்திருக்கின்றது. அது மாத்திரமல்லாமல் தார்மீகம், நாகரிகமென்றால் என்னவென்று தெரியாத அச்சமூகத்தில் அல்குர்ஆன் அதிசயிக்கத்தக்க விளைவுகளையும், வரலாறு காணாத சாதனைகளையும் உண்டு பண்ணியது.


பண்பாடற்ற ஒருசமூகத்தை பண்பட்ட ஒரு சமூகமாகவும், ஒழுக்கயீனமற்ற ஒரு சமூகத்தை ஒழுக்க சீலமுள்ள ஒரு சமூகமாகவும், அநீதி, அநியாயத்திற்கு கொடி தூக்கிய சமூகத்தை நீதி, நியாயத்திற்கு கொடி தூக்கும் சமூகமாகவும் மாற்றியமைத்ததுடன் மிருக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த சமூகத்தை மனித நேயமிக்க ஒரு சமூகமாக, வரட்டு கௌரவங்கள் ஆட்கொண்டிருந்ந ஒரு சமூகத்தை தன்மானமுள்ள ஒரு சமூகமாகவும் மாற்றியமைத்தது இந்த அல்குர்ஆன்.
பண்பாட்டு விழுமியங்கள் வீழ்ச்சியுற்றிருந்த இத்தகைய சமூகத்திலிருந்துதான் மனிதப்புனிதர்களான அபூபக்கர், உமர், உஸ்மான் போன்ற நேர்வழியின் ஒளி விளக்குகளை பிரகாசிக்கச் செய்த அதே அல்குர்ஆன்தான் இன்றுவரை எம்முடன் இருக்கின்றது. எனினும், அன்று அல்குர்ஆன் உருவாக்கிய அபூபக்கர்களையும், உமர்களையும் இன்றைய நமது சமூகம் ஏன் காணத்தவறியிருக்கின்றது?


அன்றைக்கு ஒரு வேதம், இன்றைக்கு ஒரு வேதமா? அல்லது அன்றைய மனிதர்கள் இன்றைக்கு காணாமல் போயுள்ளார்களா? இவற்றில் நாம் தேடும் வினாவுக்கு இரண்டாவது வினாவே தீர்வாக அமையும். அன்றைய ஸஹாபிய சமூகம் அல்குர்ஆனை தங்களது வாழ்க்கை நெறியாகவும், மறுமையில் சுவனத்தை அடை வதற்கான கருவியாகவும் அமைத்துக்கொண்டனர்.


ஆனால், இன்றைய முஸ்லிம்கள் திருமறைக் குர்ஆனை வெறும் சடங்காகவும், எவராவது மரணித்துவிட்டால் ஓதப்படுகின்ற சம்பிரதாயப் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர். அதேபோல், பரக்கத்திற்காக ‘மணக்குச்சி’ கொழுத்தப்படுகின்ற பொருளாகவும், அற்ப சொற்பங்களுக்காக விலை பேசப்படுகின்ற ஒரு புத்தகமாகவும் நோக்குகின்றனர். இந்த அல்குர்ஆன் பாமர மக்களுக்கு விளங்காது, அதனை விளங்க பதினாறு கலைகள் படித்திருக்க வேண்டும்.
அல்குர்ஆனைப் படிப்பதால் சிலவேளை வழிதவறவும் செய்யலாம் என்பன போன்ற தவறான நம்பிக்கைகள் எம் மத்தியில் மலிந்து கிடப்பதை பார்க்கின்றோம். இத்தகைய சிந்தனைகளை விதைப்பது ஏழெட்டு வருடங்கள் ஓதிப்படித்த மார்க்க அறிஞர்கள்(?)  என்பதுதான் மனதிற்கு வேதனை தரும் விடயமாகும்.


நபிமார்களின் வாரிசுகள் என தங்களைத் தாங்களே மார்தட்டிக்கொள்ளும் இவர்கள் இத்தகைய கீழ்த்தரமான சிந்தனைகளுக்குச் சொந்தக்காரர்கள் என்பதை நினைத்து வெட்கப்படுகின்றோம். மேற்கிலே வாழும் மாற்று சமூகம் கூட குர்ஆனை வாசித்து இஸ்லாத்தை நோக்கி சாரை சாரையாக அணிதிரண்டு கொண்டிருக்கும் இந்த நவீன யுகத்தில் வாழையடி வாழையாக இஸ்லாத்தை ஏற்றிருக்கும் நாம் ஏன் குர்ஆனை விளங்க முடியாது என்பதை சிந்திக்கத் தவறிவிட்டோம்.
குர்ஆனிய வசனங்களை ஆய்வு செய்து அந்நிய மதத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நாளுக்கு நாள் புதிய புதிய கண்டு பிடிப்புக்களை கண்டுபிடிக்கின்றனர். ஆனால் அதே அல்குர்ஆனிய வசனங்களை ஓதித்தான் நமது சமுதாயத்து மார்க்க மேதைகள் வயிற்றுப்பிழைப்பு நடாத்துகின்றனர்.


இதனால்தான் மாற்றுமத அறிஞரொருவர் ‘அல்குர்ஆனை எப்போது முஸ்லிம்கள் எடுத்து நடைமுறைப் படுத்துகின்றார்களோ அப்போதுதான் அந்த சமூகம் இழந்து போயிருக்கும் தங்களது சுய கௌரவத்தை மீளவும் பெற்றுக்கொள்ளும்’ எனக் கூறுகின்றார். இன்று உலகில் இரண்டாம் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம் சமூகம் ஐந்தாம் தரப்பாக வாழுகின்ற யூத சமூகத்தால் அடக்கியொடுக்கப்படுவதற்கு பிரதான காரணம் நமது சமூகம் அல்குர்ஆனை புறக்கனிக்கின்றமையே ஆகும். இதனை பின்வரும் அல்குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகின்றது.


“எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்” (அல்குர்ஆன் 20:124).


திருமறைக் குர்ஆனை புறக்கணித்துவிட்டு சினிமாக்களிலும், சீரியல் நாடகங்களிலும், மேற்கத்தேய கலாச்சாரங்களிலும் மோகம் கொண்டிருக்கும் நாம் புதியதொரு இஸ்லாமிய மறுமலர்ச்சியையும், சமூக ஒற்றுமையையும், இஸ்லாமிய கிலாபத்தையும் எதிர்பார்ப்பது கற்பனை உலகில் சஞ்சரிப்பதற்கு ஒத்ததல்லவா?






எனவேதான், நாம் வெறுமனே பெயர்தாங்கி அப்துல்லாக்களாகவும்,  பாத்திமாக்களாகவும் வாழாமல் பெயருக்கு ஏற்றவாறு உயிரோட்டமுள்ளவர்களாக வாழ வேண்டுமா? அத்தகைய உயிரோட்டமுள்ள சமூகத்தைத்தான் அல்குர்ஆனும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.


இதனை பின்வரும் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. ‘”வர்கள் இக் குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்களின் மீது அதற்கான பூட்டுகள் உள்ளனவா?” (அல்குர்ஆன் 47:24). மற்றுமொரு வசனத்தில் “இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?” (அல்குர்ஆன் 54:17)
-தகவல் : மஸுதா ஆலிமா.