Wednesday, September 28, 2011

தீவிரவாதிகளின் சிம்ம சொப்பனம்(!) கேப்டன் விஜயகாந்த்

நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல் முஸ்தீபுகளில் முஸ்லிம் கட்சிகள் எடுத்துள்ள முடிவுகள் பதைக்க வைக்கின்றன. ஏற்கெனவே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளைப் பிரித்தும், பெண்களுக்காக, தலித்களுக்காக என ஒதுக்கியும் ஜெயாவும் கருணாவும் அநியாயம் இழைத்து இருக்கும் பகுதிகள்கூட முஸ்லிம்களின் கையைவிட்டுப் போக வைக்க இருக்கும் நிலையில், இம்முறை முஸ்லிம் கட்சிகள் தனித்தனியாக போட்டியிட எடுத்துள்ள முடிவு, உள்ளாட்சி அமைப்புகளில்கூட இருக்கும் ஏதோ ஒரு சில வார்டுகள்கூட இல்லாமலாகும் நிலைக்குக் கொண்டுப் போய் விட்டுவிடுமோ என்று பதைக்க வைக்கிறது.

அம்மா தன் அகங்கார புத்தியினைக் காட்டிக் கூட்டணியினரைக் கழட்டி விட்ட நிலையில், அம்மாவுக்கு எதிராக மூன்றாவது அணி அமைந்திருக்கவேண்டும். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கிடைத்த அமோக வெற்றி அம்மாவைத் தலைகால் புரியாமல் ஆட வைத்துள்ளது. அந்த வெற்றி தனக்குக் கிடைத்த வெற்றியல்ல; கருணா குடும்பத்துக்கு மக்கள் கொடுத்த மரண அடி என்பதை இந்த ஃபாஸிஸத்தில் ஊறிப்போன அம்மையார் புரிந்து கொள்ளவில்லை. தேர்தல் வெற்றிக்குப்பின், இரத்தக்காட்டேறி மோடியை அழைத்தது முதல், அந்த மிருகத்தின் கண்துடைப்பு உண்ணாவிரத நாடகத்துக்கு அமைச்சர்களை அனுப்பியதுவரை தெனாவெட்டாக தன்னுடைய ஃபாஸிஸ புத்தியைக் காட்டிவரும் அம்மையாருக்குக் கருணாவுக்குக் கிடைத்த மரண அடியினைப்போன்ற அடியினைக் கொடுக்கவாவது முஸ்லிம் அமைப்புகள் ஒன்றிணைந்து முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும்!

ஆனால் நடப்பதோ வேறு!

ஏற்கெனவே திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, புதிய தமிழகம் ஆகியவை தனியாகவும் பாஜக ஒரு அணியாகவும் தேமுதிக ஒரு அணியாகவும் நிற்கும் நிலையில்,

முஸ்லிம் லீக், மமக ஆகியவையும் தனியாக நிற்கிறார்களாம்!

இது யாருக்கு இலாபத்தைக் கொடுக்கும் என்ற சிறு சிந்தனைகூட இவர்களுக்கு இல்லாமல்போய் விட்டதே!

திமுகவுக்குக் கொடுத்த மரண அடியால் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த அம்மையார், திமுகவினரைச் சகட்டு மேனிக்குக் கைது செய்து சிறையிலடைத்தும் தன் அகங்காரத்தை விட்டுக்கொடுக்காமல் சமச்சீர் கல்வி விஷயத்தில் மாணவர்கள் நலனில் விளையாடி, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என கோடிகளைச் செலவழித்து வழக்கு நடத்தி இறுதியில் உச்ச நீதிமன்றத்திடமிருந்து கொட்டு வாங்கித் திரும்பியதும் புதிய தலைமை செயலக விஷயத்தில் கோடிகணக்கான மக்கள் வரிப்பணத்தை நாசமாக்கியதன் மூலமும் மக்களிடம் வெறுப்புக்குரியவராக மாறியிருக்கும் நிலையில், அதிமுகவுக்கு எதிராக அனைவரும் தனித்தனியாக பிரிந்து நின்றால் அது அம்மையாருக்கும் பாஜகவுக்கும்தான் பலனை ஏற்படுத்தும் என்பது இவர்களுக்குப் புரியவில்லையா?

அரசியலில் கத்துக்குட்டியான தீவிரவாதிகளின் சிம்ம சொப்பனம்(!) கேப்டன் விஜயகாந்திற்கு இருக்கும் எண்ணம்கூட இந்த முஸ்லிம் கட்சிகளுக்கு இல்லாமல் போனது ஏனோ?

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா வளவனுக்கு இருக்கும் பரந்த எண்ணம்கூட இந்த முஸ்லிம் கட்சிகளுக்கு இல்லாமல்போனது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது!

சுமார் 14 முஸ்லிம் அமைப்புகள் + 6 கிறிஸ்தவ அமைப்புகளை ஒன்றுகூட்டி அவர்களுடன் கூட்டணி வைத்து களம் காண்கிறார் திருமா. நல்லவேளை, இந்த அணியில் புதிய எஸ் டி பி ஐ கட்சியும் இணைந்துள்ளது. 
இப்போதைய அரசியல் நிலையில், இந்த அணிக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, ஆனால் இவர்களின் செயல்பாடே சிறிதாவது சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட செயல்பாடாக எனக்குத் தோன்றுகிறது.

அம்மாவின் அணியிலிருந்து வெளியேறி தனித்து நிற்கும் மமகவின் அணுகுமுறை, அம்மாவுடன் அண்டர் கிரவுண்ட் அட்ஜஸ்ட்மெண்ட் நடத்தியிருக்குமோ என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது. ஏனெனில், இவர்கள் தனித்து நிற்பதால், அதன் பலன் நிச்சயம் அம்மையாருக்கும் பாஜகவுக்கும்தான் கிடைக்கும் என்பது வெளிப்படை.

மமக மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய இரு கட்சிகளும் திருமாவுடன் இணையட்டும். இல்லையேல் இந்தத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியிருக்கட்டும். அல்லாமல், முஸ்லிம்கள் வெற்றிபெற வாய்ப்புள்ள பகுதிகளில் தங்கள் வேட்பாளர்களையும் களமிறக்கி, அதிமுக, பாஜக, திமுக, தேமுதிக என வேறு யாராவது வெற்றிபெற வழிவகுத்தால் அதனை இச்சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது!

என் எண்ணத்தில் ஏதாவது பிழைகள் இருப்பின் சகோதரர்கள் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.

- அப்துர் ரஹ்மான்

No comments:

Post a Comment