Tuesday, November 27, 2012

பி.எஸ்.அப்துர் ரகுமான் பல்கலைக்கழகமும், ஆப்பிள் மொபைல் போன் தொழில்நுட்ப நிறுவனமும்

சென்னை வண்டலூர் பி.எஸ்.அப்துர் ரகுமான் பல்கலைக்கழகமும், ஆப்பிள் மொபைல் போன் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து ரூ.40 லட்சம் செலவில் மொபைல் போன் தொழில்நுட்ப ஆய்வு மையம் அமைத்துள்ளன.
இந்த மையத்தை, பல்கலைக்கழகத் தலைவர் அப்துர் காதர் ஏ.ரகுமான் புகாரி புதன்கிழமை துவக்கி வைத்து பேசியதாவது:
தொலைபேசிக்குப் பதிலாக தொலைதொடர்புப் பணிக்கு பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் தொழில்நுட்பம், தற்போது கற்பனைக்கெட்டாத வகையில் இமைக்கும் நொடிக்குள் பல்வேறு சேவைகளை செய்துவரும் சாதனமாக மாறிவிட்டது.
பன்முகத் தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்துவரும் மொபைல்போன் தொழில்நுட்பத்தை, மாணவர்களும் மேம்படுத்திக் கொள்ள முடியும்., ஆப்பிள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு அமைக்கப்பட்டுள்ள ஆய்வு மையத்தை அனைவரும் பயன்படுத்த முன்வரவேண்டும் என்றார் அவர்.
அப்துர் ரகுமான் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.சங்கரநாராயணன், பதிவாளர் வி.எம்.பெரியசாமி, கல்லூரி டீன் கே.எம்.மேத்தா, இயக்குநர் வி.என்.ஏ. ஜலால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
THANKS TO

Saturday, November 24, 2012

இனியென்ன செய்ய வேண்டும்?






இந்தச் சுட்டியில் (யூ ட்யூப்)

 
கீழ்க்காணும் என் பாடல் ஒலிக்கும், இலண்டன் தமிழ் வானொலியியின் அறிவிப்பாளர் திருமதி ஷைபா மாலிக் அவர்களின் குரலில்...



உருவத்தில் நிறத்தில்நீ வேறு பட்டும்
.. ..உள்ளத்தில் உணர்வுகளில் மனித நேயம்
கருத்தில்நீ  கொள்வதனால் புனிதம் காண்பாய்
.. ..கண்முன்னே பல்லுயிர்கள்  பசியால் வாட
வருத்தத்தில் பங்கின்றித் திரிவர் தீயர்;
....வறியநிலை மண்டையிலே கொண்டோர்  இங்கே!
 விருத்தத்தில் நானிங்குப் பாடி வைக்க
.....விரும்பியவர் படித்துணர்ந்தால் என்றும் நன்றே!



எல்லார்க்கும் எல்லாமும் வேண்டும் என்னும்
.. ...எண்ணமிலார்த் தான்மட்டும் போதும் என்பார்
இல்லார்க்கு ஈந்துவக்கும்  எண்ண மின்றிச்
..... சீரழிப்பார் ஊரழிப்பார் சாகும் மட்டும்
நல்லோர்கள் வல்லவராய் மாற வேண்டும்
.. ...நலிந்தவரின் துயர்நீக்க உதவ வேண்டும்
புல்லான செடிகளும்தான் புண்ணை ஆற்றப்
.. ...பொதுநலத்தை ஏன்மனிதன் பொசுக்கு  கின்றான்?  


வல்லோராய்ச் சேர்த்துவைத்த வசதி யாவும்
.... வாழ்நாளின் இறுதிவரை உறுதி யாமோ?
பொல்லாதார் சமத்துவத்தைப் போற்ற மாட்டார்
.... போங்காலம் நெருங்கியதும் சேர்த்து வைத்த
எல்லாமே இவர்கூட வாரா தென்று
.... எண்ணத்தில் உதிக்காமல் போன தேனோ?
நல்லோராய் வாழ்ந்தவரின் வரலா  றெல்லாம்
.... ஞாலமுள்ள நாள்வரைக்கும் புகழாய் வாழும்!

உள்ளத்தை மறைத்துரையில் பரிவைக் காட்டல்
.. ..ஊர்கெடுப்போர் ஏமாற்று வித்தை என்றே
பள்ளத்தில் இருப்பவர்கள் உணர்ந்து மீளப்
.... பலநாட்கள் ஆகுமென்று அறிந்தே செய்யும்
கள்ளத்தை வளர்ப்பவர்கள் தொடரும் தீது
.. ..கருணையாளன் தருகின்ற தீர்ப்பால் வீழும்
பள்ளத்தை நோக்கித்தான் நீரும் பாயும்;
.... பாவிகளி வர்களைத்தான் பாவம் சேரும்!

Tuesday, November 20, 2012

பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை !!!!!





பற்றி எரிகிறது 
...பாலஸ்தீன் காசாவில்
வெற்றிக் கிடைத்திடவே
...வேண்டும்தீன் நேசர்காள்!

காலமும் காணாக்
...காட்சித்தான் பின்ன
 பாலகர் செய்த
... பாவம்தான் என்ன?

கொடுமையிலும் கொடுமை
...கொலைசெயுமிவ் வன்மை
கடுமையுடன் தடுத்தால்
...களைந்துவிடும் தீமை

இறைவனின் கோபம்
....இஸ்ரவேலர் அடைவர்
விரைவுடன் தீர்ப்பு
...வந்திடவும்; மடிவர்

இறுதிநாள் வருகைக்கு
....இக்கொடுமை ஒருசான்றா?
உறுதியாய்க் கொடுமைக்கு
...உள்ளமெலாம் உருகாதா?

கொத்துக் கொலைகண்டு
...குழந்தைகள் நிலைகண்டு
கத்தும் கடல்கூட
...கதறுமே பழிதீர்க்க

தீர்ப்புநாள் வராதென்று
....தீதைச் செய்தாயோ?
யார்க்குமே அடங்காத
...யூத ஷைத்தானே!

அர்ஷில் எட்டும்
....அலறல் சத்தம்
குர்ஸி தட்டும்
...குழந்தை ரத்தம்

பாதிக்கப் பட்ட
...பாலஸ்தீன் மக்கள்
நீதிக்கு முன்பு
...நிற்கின்ற வேளை

கூட்டுச் சதியால்
..கூடிக் குலாவி
வேட்டு வெடித்தல்
..வேடிக் கையே!

பொய்நாக் கூட்டம்
...புரிய வில்லையா?
ஐநா சபையோர்
...அறிய வில்லையா?

--
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/(கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
Tags: 

என் கேள்விக்கென்ன பதில்?




சுதந்திரம் அடையத் தந்தது
.... சுரண்டல் பெருக்கித் தின்னவா?
இதந்தரும் நலத்தை மக்களும்
.... இனிதே விரும்பி மின்னவா ?

உரிமைகள் ஒருசிலர் மட்டும்
....உரிமையாய்ப்  பெற்றுச் சூழவா?
விரிவுடன் அனைவரும் பெற்று
....விரும்பிய வண்ணம் வாழவா?

கடமைகள் எல்லாம் வெற்றுக்
.. கண்துடைப் பென்பதே எல்லையா?
உடைமைகள் காத்து நாட்டின்
.. உன்னதம் போற்றுவோர் இல்லையா?

செல்வம் என்பதே அரசியலார்ச்
....சொத்துச் சேர்த்திட  மட்டுமா?
கல்வி கற்றவர் உழைப்பினாலே
....காசு சேர்த்திடக் கிட்டுமா?

தாயகம் இனியும் சாதிகளின்
....தனித்தனித் தீவு நாடா?
தூயநல் மனித நேயமதைத்
....துளிர்விடும் அன்புக் காடா?

ஒருமைப் பாடு வெற்று
....உளறலில் வெளிவரும் கேலியா?
அருமை நாடு பெற்ற
....அடிப்படை உரிமையும் போலியா?

பாரதத் தேசமும் ஊழலால்
....பேர்கெடப் போகவும் வேண்டுமா?
யாரதன் காரணம் தாமதம்
...இன்றியே காணவும் தூண்டுமா?

மனிதர்நாம் என்பதை நாளும்
......மறந்துப் போவதும் ஆகுமா?
இனிதாய்நம் அன்பினைக் காட்டி
.....இகத்தில் வாழ்தலும் வேண்டாமா?

வினாக்களை யானும் ஈண்டு
....விடுத்தனன் உங்களை நோக்கி
கனாக்களில் வாழும் சூழல்
...களைந்திட ஆவலும் தேக்கி

அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com


Saturday, November 17, 2012

தியாகம்


தியாகம்





தீயகம் களைவதே
....தூயநல் தியாகமாம்
ஐயமில் விருப்பமும்
....ஆங்குதான் உதயமாம்



சோம்பலின் எதிரியாம்
....சொர்க்கத்தைத் தருவதாம்
காண்பதில் அரியதாம்
....கர்ப்பத்தில் உரியதாம்



தூய்மையின் பிறப்பிடம்
....தியாகத்தின் உறைவிடம்
தாய்மையின் சிறப்புதான்
....தரணிக்கே முதலிடம்



விழுப்புண் போலவே
...வியர்வை விழவே
உழைக்கும் தந்தையும்
....உயர்வின் தியாகி


தோணியாய்க் கரைசேர்க்கத்
...தோழமையின் உணர்வுடன்
ஏணியாய் இருந்தார்கள்
....ஏற்றிவிட்ட  தியாகிகள்



வானத்தின் தியாகமதை
....வடித்துவைக்கும் மேகமழை
தானத்தின் செடிகளெலாம்
....தியாகவிதை   வீசியதே


பசித்தவரின் துயரத்தைப்
....பசித்திருக்கும் பயிற்சியினால்
ருசித்துணரும் தியாகத்தை
.....ருசித்தவர்தான் உணர்ந்திடுவர்



இறையின் கட்டளை
....இறுதிக் கடமையை
முறையாய்ச் செய்வதும்
....முழுமைத் தியாகமே




-- அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர் “கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

Saturday, November 10, 2012

என்னாட்டின் இளைஞர்காள்! என்னாச்சு உம் நிலைகள்?!




நாடுகாக்க வந்தவராய் வரலாற் றேட்டில்
.. நாம்காணும் முந்தையநல் லோர்கள் ஆட்சிப்
பீடுடனே மக்களுக்குப் பணியை ஆற்றிப்
.. பேர்பெற்ற  நிகழ்வுதனைச் சொல்லப் போமோ?
காடுமேடு வளைத்ததனால் குடும்பம் காக்கக்
.. கட்சிவளர்ப் பதையின்று காண்கின்  றோமே!
கூடிநிற்கும் தொண்டருக்குக் கைய  சைப்பே
.. குதூகலத்தைக் கொடுக்குமென்ப  தவரின் கொள்கை!

சிந்திக்கும் பழக்கமின்றி மூளை வேலை
.. செய்யவிடாக் கூட்டம்தான் காண்போம்  இன்று
 நிந்திக்கும் பழக்கமான  காலில் வீழும்
.. நிலைகெட்டக்   கூட்டமிவர் பின்னால்  செல்லும்
மந்திக்கும் மனிதனுக்கும் வேறு பாடே
.. மதியென்று அறிந்திடாத மடையர்க் கூட்டம்
சந்திக்கும் பொழுதெல்லாம் என்ன பேசும்?
.. சதித்திட்டம் தீட்டத்தான் கூடு வாரே!

எப்படியோ நலமாக வழிகள் காட்டி
.. இவர்களெல்லாம் சபையில்நற் திட்டம் போட
தப்பென்று அறிந்துகொண்டே வாக்கை விற்கும்
.. தாராளம்தான் வறியவரின் நெஞ்சில் ஊறும்
அப்படியே அவர்வாழ்க்கை இருந்தால் தானே
.. அடுத்தமுறை பதவித்தேர் ஏறிப்  போவார்
இப்படியே எந்நாட்டில் குடிகள் ஆட்சி
.. இழிநிலையில் இருப்பதனால் அதிர்ச்சி யுண்டோ?

ஆங்கிலேயர்க் கடிமையாக இருந்த  நாளில்
.. ஆர்வமுடன் இளைஞர்கட் தலைவர் பின்னே
ஓங்கியபே ருணர்வோடு கிளர்ந்த மாட்சி
.. ஒருநொடியில் உள்ளத்தில் தோன்றும் காட்சி
நீங்கியதும் அடிமைவாழ்வே எனுங்கொண்    டாட்டம்
.. நீடிக்கும் நிலையுளதா? ஏழை  மக்கள்
ஏங்குகிறார் கொள்ளையராய்ச் சொந்த   நாட்டார்
.. ஏய்ப்பூழல் கொடுஞ்சுரண்டல் காணும்  போழ்தே!

திரைப்படங்கள் மிகைப்படுத்தும் ஆட்டம் பாட்டம்
.. திசைமாற்றி வைத்ததனால் ஒழுக்கம்  ஓட்டம்
நரைமறைத்து நடிகனவன் இளைய பெண்ணை
.. நளினமின்றித் தீண்டிவிளை   யாடக்  கண்டு
முறைதவறி நடப்பதற்குத் தூண்டும் தீமை
.. மூளையில்லார்க்  கூட்டத்தில் இளைஞர் முந்தி!
குறைகண்டால் சீற்றமுடன் சொல்வார் உண்டோ?
.. கூரறிவின் செயல்திறனைக் காட்டு   வாரோ?

பெற்றவர்கள் கற்றவனாய் ஆகு  தற்குப்
.. பெரும்பாட்டின் அருமையினை அறிவா  யாநீ?
மற்றவர்போல் நீயின்றி உன்னைச் சான்றாய்
.. மதித்துப்பின் தொடர்ந்திடவே பல்லாற்  றானும்
பற்றுமொழி நாட்டின்முன்   னேற்றம்  என்றே
.. பணியாற்றும் அணியொன்றைக் காண்பா   யாநீ?
முற்றுமிந்தக் கொடுமைகளை இளைஞர்க் கூட்டம்
.. முற்றிலுமாய் ஒழித்திடத்தான் வழிகாண் பீரே !

அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com


Tuesday, November 6, 2012

போலிகள் - பயிரை மேயும் வேலிகள் !







விளக்கினை ஏற்றிவிட்டு
.. விசிறியால் வீசுவாரோ
அழுக்கினை நீக்கிவிட்டு
.. அசுத்தமும் பூசுவாரோ?

தேசியம் பேசுகிறார்
.. திருடுகள் பண்ணுகிறார்
ஆசியும் கூறுகிறார்
.. அழிவையே எண்ணுகிறார்

வேலியே பயிரைத்தான்
.. வேகமாய் மேய்தற்போல்
போலிகள் இவர்கள்தாம்
.. போதனைச் சாயத்தில்

என்ன மனிதரிவர்?
.. எளியவர்க்கு நல்லவராம்
அன்னார் நடித்திடுவார்
.. அரசியலில் வல்லவராம்

ஓரங்க நாடகம்
..ஒவ்வாத பாத்திரம்
யாரங்குக் கேட்பது
...எல்லாமே சாத்திரம்

என்னென்ன ஒப்பனை
...எளியோரின் வேதனை
எண்ணாமற் போதனை
....எளிதாய்ப்பொய் விற்பனை

அரிதாரம் இவர்களின்
....ஆதாரம் ஆனது
புரியாத பதங்களே
...பூமாலை ஆனது

இல்லாத ஒத்திகை
..எழுதாத வசனம்
பொல்லாத  செய்திகள்
..பொழுதானால் விசனம்


அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

Thursday, November 1, 2012

தாலாட்டு






தாலாட்டு

கருவறையில் உறங்கிட
கருணையாளன் வழங்கிடும்
அருமையான முறைகளே
அளவற்ற தாலாட்டு!

தூளியை ஆட்டி
தாயவள் பொழிவாள்
தோளில் சாய்த்து
தந்தையும் தருவார்

தாலாட்டுப் பாடலாய்த்
தணிக்கும் அழுகையை
வாலாட்டும் மழலையும்
வாய்பொத்தி உறங்கவே

கற்றவர் சபையிலே
கண்ணியமாய்க் கைதட்டிப் 
போற்றப்  படுதலும்
புண்ணியமாய்த் தாலாட்டு 

வணிகமும் தொழிலும்
வளம்தரும் ஆக்கம்
பணிகளும் சீர்பட
பயன்தரும் ஊக்கம்

அரியதாய்த் தாலாட்டு 
அஃதொரு சீராட்டு
பெரியதாய்ச் சாதிக்க
பேறுபெற்ற பாராட்டு

மனைவிதரும் அன்பு
மடிமீது சாய்ந்து
மனமெங்கும் பூசும்
மகிழ்வானத் தாலாட்டு

படகுக்குத் துடுப்பும்
படிப்புக்குத் துடிப்பும்
கடலுக்கு அலையும்
காற்றுக்கு இலையும்

தாலாட்டு என்பேன்!







--
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

Tuesday, October 23, 2012

ஏணிப்படிகளை மனிதா ஏனிப்படிநீ மறந்தாய்?








முதற்பள்ளி நமக்காகி அமுதம் ஊட்டும்
....முதலிற்றாய் மடியிற்நீ பார்த்த மேனி
பதம்பெற்றுப் பக்குவமாய் உன்னைச் சீராய்ப்
... பழக்கிவிட்ட அன்பேதான் முதலாம் ஏணி
நிதம்கற்றுத் தந்துதவும் அறிவாம் தந்தை
...நீவாழத் தானுழைத்த இரண்டாம் ஏணி
விதம்சொல்லில் கல்விக்கண் திறந்து வைத்த
....வித்தைகள்தாம் குருவென்னும் மூன்றாம் ஏணி


தொழில்சீராய் வணிகம்நே ராய்நீ செய்ய
...தொடர்ந்துவரும் அனுபவமே நான்காம் ஏணி
எழில்பெற்ற இன்பமுடன் வாழ்க்கைத் தேடி
...இணையாக வருபவரே ஐந்தாம் ஏணி
வழியெல்லாம் வசந்தங்கள் பூக்கக் காண
...வளர்த்தெடுத்த நன்மக்கள் ஆறாம் ஏணி
பழியில்லா நற்புகழும் பணமும் பேறும்
...பெற்றுவாழ ஏற்றிவிடும் எட்டாம் ஏணி

கடும்முயற்சி யும்தோல்வி யடைதல் கண்டு
.. கலங்காதுப் படிக்கட்டாய்க் கருத்திற் கொண்டு
தடுப்புகளாம் சோதனைகள் தாண்டும் போழ்துத்
.. தாளாண்மை வெற்றியெனும் கனியைக் காண்பர்
படுத்துகொண்டே வெற்றிகளைப் படைப்பேன் என்னும்
.. பகற்கனவுத் தோல்வியிலே தோய்த்துக் காண்போர்
எடுத்துணர்த்து வோர்கூறும் அறிவுப் பாடம்
.. ஏற்பதுவே ஒன்பதான உச்சி ஏணி!


ஏணிகளும் ஏற்றிவிட்ட பின்னர் ஏணி
...எதுவென்றே அறியாத வேட மிட்டு
ஏனிவனும் மாறிவிட்டுப் பேசு கின்றான்?
..இறங்குவதற் கும்ஏணி வேண்டும் என்று
மானிடனும் மறப்பதனால் நன்றாய்ப் பெய்யும்
....மழைகூடப் பொய்த்துவிடும் உணர்வா யோநீ
வானிலையில் மழையின்றிக் காணு தற்போல்
....வாழ்க்கையிலும் வறட்சியைநீ காண் கின்றாய்!

 

-- 
 
 
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பாடசாலை)
அபுதபி(தொழிற்சாலை)
 
என் வலைப்பூ தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com  (கவிதைச் சோலை)
 
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
                                       shaickkalam@yahoo.com
                                       kalaamkathir7@gmail.com
 
 
அலை பேசி:             00971-50-8351499       / 056-7822844

Friday, October 19, 2012

ஹஜ் எனும் அரும்பேறு அல்லது அருட்பேறு !





இப்ராஹீம்(அலை) மூலம் விடுத்த அழைப்புக்கு
“லப்பைக்” திருச்சொல்லால் லட்சக் கணக்கானோர்
ஒப்பிலா னில்லத்தில் ஓதும் மறுமொழி
இப்புவி யெங்குமே ஈர்ப்பு.

சாந்தம் பொழியச் சமத்துவம் காணவே
காந்தமாய் ஈர்க்கும் கருவான பள்ளி
துருவான பாவம் துடைக்கும் பணிகள்
இரும்பு மனமே இலகு.

குழந்தையாம் இஸ்மாயில்(அலை) குத்திய பாதம்
உழன்றதால் பாலையில் உண்டான நீரை
அருந்துவோ ரெண்ணம் அடையும் பலன்கள்
மருந்தாம் பிணிக்கு மகிழ்ந்து.

மறுமையாம் தீர்ப்புநாள் மஹ்ஷரின் தோற்றம்
பொறுமையாய் நிற்கும் பொழுதில ரங்கேற்றம்
நீண்ட இறைஞ்சுதல் நெஞ்சை உருக்கிட
மீண்டு வருவோம் மிளிர்ந்து.

பிறக்கும் நிலையில் பிழைக ளறியா(து)
பிறக்கும் குழந்தைப் பிறத்தலைப் போல்
புடமிடும் தங்கமாய்ப் பூமியில் வாழ
திடமுடன் மாற்றும் திறன்,

அறுக்கத் துணிந்தார் அருமை மகனை
பொறுத்தே பணிந்தார் புதல்வர் மகிழ்வுடன்
ஐயம் களைந்த அடியாரின் அன்பினை
மெய்பிக்கச் செய்திடும் மாண்பு.

இறைச்சி இரத்த மெதுவுமே நம்மை
இறைவனும் வேண்டு மியல்பில் கிடையாது
அன்பு நிலைக்க அறமாய் வறியோர்கள்
இன்பம் பெறுவதற் கீந்து.


அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி:             00971-50-8351499       / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

Monday, October 15, 2012

சவூதியில் நடந்த உள்ளத்தை உருக்கும் நிகழ்ச்சி





சவூதியில் நடந்த உள்ளத்தை உருக்கும்  நிகழ்ச்சியில் கடந்த  இரண்டாண்டுகளுக்கு முன் தன் ஒரே மகனைக் கொன்ற இளைஞனை எவ்வித நிபந்தனையுமின்றி, இறைப் பொருத்தம் வேண்டி மன்னிப்பதாக அன்னையொருவர் கூறியுள்ளார்.
இத்தனைக்கும், ஏழையான அந்தத் தாய்த் தன்னுடைய மன்னிப்பிற்காக வழங்கப்பட முன்வந்த பல இலட்சம் ரியால்கள் + சொத்துகளை இரத்தத் தொகையாகப் பெறுவதற்கும் மறுத்துவிட்டார். இது பற்றிக் கூறப்படுவதாவது:

மர்ஸூகா அல் பிலேவி என்பது அந்தத் தாயின் பெயர். விதவையான அவருக்கு இறந்துபட்ட மகனும், மூன்று மகள்களும் (அவர்களில் ஒருவர் முழுமையாக வாத நோயால் தாக்கப்பட்டுச் செயலற்றவர்), வாதநோயால் பாதிக்கப்பட்ட வயதானத் தந்தையும் உண்டு.  வாழ்வாதாரமாக, மறைந்த கணவர் பெயரில் மாதந்தோறும் அரசு அளிக்கும் ஓய்வூதியம் சுமார் 2000 ரியால்களும் சவூதிச் சமூகக் காப்பீட்டு நிறுவனம் மாதந்தோறும் அளிக்கும்  1000 சவூதி ரியால்களுமாக இவையே  வாழ்வை நகர்த்த உதவும் பொருளாதார ஊன்றுகோல்கள் அவருக்கு. சொந்தத்தில் வீடின்றி இளவரசர்ச் சுல்தான் ஆதரவகம் ஒன்றில் தான் தங்கியுள்ளனர்.
கடந்த இரண்டாண்டுகளுக்கு முன், ஒரு மாலை நேரத்தில், உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காகத் தன் மகனுக்காகக் காத்திருந்தார் மர்ஸூகா. ஆனால், மகன் வராமல், மகன் கொல்லப்பட்ட செய்தியே அவரை அடைந்தது.  ஒரே மகனை இழந்துவிட்ட இத்துயரையும் 'இறைவனின் நாட்டம்' என்று எளிதாகவே எடுத்துக்கொண்டார் அந்தத் தாய்.

அதன்பிறகு, கொலையாளிப் பிடிபட்டுவிட, தண்டனையும் உறுதிபடுத்தப்பட்ட பிறகு, கொலை செய்தவரின் குடும்பத்தினர் மர்ஸுகாவைத் தொடர்பு கொண்டு கொலையாளியை மன்னித்துவிடும்படியும், இரத்தப்பணமாக மில்லியன் கணக்கில் சொத்துகளும் பணமும் தருவதாகவும் கெஞ்சினர். கொலை செய்த இளைஞரின் தகப்பனார்ப் பன்முறை கெஞ்சிப் பார்த்தும் தன் ஒரேமகனைப் பறிகொடுத்த அன்னைக்கு மன்னிக்க மனம் வரவில்லை. சுமார் 20 இலட்சம் ரியால்கள் மற்றும் சொத்துகளும் இறந்த மகனுக்கு ஈடாகாது என்றே அவர் எண்ணினார்.

இந்நிலையில், எதிர்பாராத ஒரு நாளில் நீதிமன்றம் சென்ற மர்ஸூகா தன் மகனைக் கொன்றவனைக் காண விரும்புவதாகக் கூறினார். அங்கே, அந்த இளைஞனைக் கண்டவருக்குத் தன் மகனின் நினைவு வந்திருக்க வேண்டும், "உன் பணமோ, சொத்துகளோ வேண்டாம், அவை பெரிதில்லை, அல்லாஹ்வுக்காக உன்னை எந்த நிபந்தனையுமில்லாமல் மன்னிக்கிறேன்" என்றார் மர்ஸூகா. இதைக் கேட்ட அனைவருக்கும் ஆனந்த ஆச்சரியம்.  மர்ஸூகாவின் மன்னிப்பு உடனடியாக நீதிபதி முன்னிலையில் ஆவணப்படுத்தப்பட்டது.

நிபந்தனையற்ற மன்னிப்பைப் பெற்ற அந்த இளைஞனுக்குச் சொல்ல முடியாத பெரும் ஆச்சரியம். நன்றி சொல்லவும் நா எழவில்லை. நிபந்தனையற்றுத் தன்னை மன்னித்து இறையருளுக்குப் பாத்திரமான அந்தத் தாயைத் தானும் இப்போதுமுதல் தாயாக ஏற்பதாகவும், அவருடைய வாழ்நாள் முழுதும் அவருக்குப் பணிவிடை செய்ய விரும்புவதாகவும் இதுவே தான் செலுத்தக்கூடியப் பிரதியுபகாரமாக இருக்கும் " என்றும் அந்த இளைஞன் கூறியுள்ளார்.

சவூதியின் தபூக் மாகாணத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில், பணத்தைப் பெரிதாகக் கருதாத அந்த மனிதாபிமானத் தாயைச் சவூதி ஊடகங்களும், மக்களும் மிகவும் பாராட்டினர்.

நன்றி: இந்நேரம்.காம்
-- 
 
 
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பாடசாலை)
அபுதபி(தொழிற்சாலை)
 
என் வலைப்பூ தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com  (கவிதைச் சோலை)
 
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
                                       shaickkalam@yahoo.com
                                       kalaamkathir7@gmail.com
 

Sunday, October 14, 2012

அதிராம்பட்டினத்தில் PJ


எத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன.... 'நலம்பெற துவா செய்யுங்கள்' என்று..! ஆனால், இன்று இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெயில்- இது ஏனோ, எனது குடும்பத்து உறுப்பினர் நோய்வாய்ப்பட்டது போன்ற ஒரு சோகத்தை என்னுள் ஏற்படுத்துகிறது. காரணம், நான் மட்டுமல்ல... 'குர்ஆன் ஹதீஸ் மட்டுமே தனது வாழ்வியல் மார்க்கம், என்று யாரெல்லாம் எனது தலைமுறையில் வாழ தலைப்பட்டனரோ, அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்வினுள்ளும்மார்க்க ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் மவுலவி சகோ.பீஜே' என்று கூறினால் அது மிகை அல்லதான்..!


நான் பிறந்த இடமான, பாபநாசம்-பண்டாரவாடையில், இமாம் அபூ ஹனிபா ரஹ் அவர்களை பழிக்கும் கொடியவராக எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் இவர். பின்னர், நான் படித்து வளர்ந்த இடமான, அதிராம்பட்டினத்தில்... இமாம் ஷாஃபி ரஹ் அவர்களை அவமானப்படுத்தும் இஸ்லாத்தின் வில்லனாக மீண்டும்  எனக்கு சொல்லப்பட்டவர் இவர். ஊருக்கு நாலு பேர், இப்படி 'நஜாத்துக்காரன்' என்று இருந்த அக்காலத்திய அவரின் ஆதராவளர்களை 'அஞ்சாம் மதஹப்'காரர்கள் என்று சொல்லி, பள்ளியின் வாசலில், 'நான்கு மதஹபுகளில் ஒருவரையாவது பின்பற்றாதவருக்கு இப்பள்ளியில் அனுமதி இல்லை' என்று பலகை மாட்டி... பள்ளியை விட்டு, தள்ளிவைத்து... இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களாக எனக்கு காட்டப்பட்ட போது... அத்தோடு 'வேண்டாம்பா இந்த விரோதிகள் சகவாசம்' என்று மெய்யாலுமே மூடத்தனமாக நான் நம்பி... என்பதுகளின் இறுதியில் இவர்களை வெறுத்து ஒதுங்கி விட்டேன்.

ஆனால்.... அதே ஆண்டுகளில்... வெறும்  2 MP மட்டுமே வைத்து இருந்த பாஜக, பாபர் மஸ்ஜிதை இடிக்கும் ஓட்டுப்பொறுக்கி அஜன்டாவை கையில் எடுத்தவுடன்... 88 MPக்களுடன் ஆளுங்கட்சி கூட்டணி என்றாகி... மீண்டும் பாபர் மஸ்ஜித் இடிப்பு ரத யாத்திரை மூலம் 120 MP க்களுடன் வலுவான எதிர்க்கட்சியாகி... 'கரசேவை' என்ற சட்டத்துக்கு எதிரான மறைமுக பயங்கரவாதம் செய்து பாபர் மஸ்ஜிதை இடித்தனர். ஆனால், இதன் பிறகு... ராமர் கோவில் கட்டும் ஆர்வத்திலிருந்து அவர்களின் ஆதரவாளர்களை ஆட்சிக்கு வந்தவுடன் அதுபற்றி பார்ப்போம்... என்று திசை திருப்பி... ஹிந்துத்துவா வெறியூட்டப்பட்ட மக்களை தக்க வைப்பதற்கு பாஜக எடுத்த... அடுத்த அரசியல் ஓட்டுப்பொறுக்கி ஆயுதம் தான் 'பொது சிவில் சட்டம்'. இது எந்த அளவு முட்டாள்த்தனமானது என்று இப்போது எல்லாருக்கும் தெரியும். அப்போது, இதுபற்றி அந்த அளவு விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. மிகச்சிலருக்கே இருந்தது. அதனால்தான் அவர்களுக்கு 161 அப்புறம் 182 சீட் எல்லாம் வந்தது.

இந்நிலையில் ஒருநாள் (1993 /94 என்று நியாபகம்) அதிராம்பட்டினத்தில் ஒரு சம்பவம் நடந்தது. செக்கடிப்பள்ளி எதிரே வற்றி இருந்த செக்கடி குளத்திடலில் மவுலவி பீஜே வின் பொதுக்கூட்டம். மேடை லைட் எல்லாம் முதல் நாளே போட்டு விட்டார்கள். ஊர் முழுக்க போஸ்டர். 'PJ பேசுகிறார்' என்று. 'என்ன பேசுகிறார்... எதைப்பற்றி பேசுகிறார்' என்பதெல்லாம் யாருக்கு வேணும்...? 'அதெப்படி நம்ம எதிரி நம்ம இடத்துக்கு வந்து பேசலாம்...?' அவ்ளோதான் மேட்டர். விளைவு...? எல்லா போஸ்டரும் கிழிக்கப்பட்டது. அடுத்தநாள், காலையில்... பரபரப்பான தகவல் பஸ் ஸ்டாண்டில் நியூஸ் பேப்பர் வாங்கும்போது நண்பர்களால் பரிமாறப்பட்டது. அதாவது... PJ மீட்டிங்கிற்காக போடப்பட்டு இருந்த மேடை உடைக்கப்பட்டு... கீற்று பிய்த்து எறியப்பட்டு...  மைக் செட் லைட் எல்லாம் நொறுக்கப்பட்டு... சொற்பொழிவு இன்று நடத்த முடியாத அளவுக்கு ஆக்கப்பட்டு விட்டது என்ற நியூஸ்..!

'இந்த இடத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டருக்கு அப்பால் பேச்சு காதில் விழாத பாதுகாப்பான(?) தூரத்தில்தான் இருக்கேன் நான்' என்ற நிம்மதியான எண்ணத்தில் இருந்த எனக்கு... வந்தே விட்டது அவரின் உரை எனது காதுக்குள்..! இது எப்படி..? ஆமாம்.! அந்த மீட்டிங் கேன்சல் ஆக வில்லை..! இடம் தான் கேன்சல் ஆகியது. எனவே, மீட்டிங் எங்கள் வீட்டு அருகே இருந்த 'சாரா கல்யாண மண்டபத்தில்' மாற்றப்பட்டு அங்கே நடந்தது.  நான் என்னதான் காதை பொத்திக்கொண்டு இருந்தாலும்... வீதி எங்கும் கட்டப்பட்ட ஸ்பீக்கர்கள் மூலம் எனது செவிப்பறையை தட்டி எனது சிந்தைக்குள் சென்ற அவர் சொன்ன விஷயம் இதுதான்...........

"நான் என்ன, இவர்களை எதிர்த்தா பேச வந்துள்ளேன்..? நான் எதுக்கு இங்கே வந்து இருக்கேன்... எதைப்பற்றி பேச வந்து இருக்கேன்... இதுகூட தெரியாமல்... இப்படி மேடையை கலைத்து இடைஞ்சல் செய்தால் இதுக்கு என்ன அர்த்தம்..? நாளை பேப்பரில் நம்ம எதிரிகள்... என்ன எழுதுவாங்க தெரியுமா..? 'அதிராம்பட்டினத்தில் முஸ்லிம்கள் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து பேச வந்தவரின் மேடை உடைத்து சட்டத்துக்கு தம் ஆதரவை தெரிவித்தனர்.' இப்படி ஒரு அவப்பெயர் உங்கள் ஊருக்கு தேவையா...? நமக்குள் இருக்கும் மார்க்கம்  பற்றிய வேறுபாட்டையா காரணமாக சொல்வார்கள்..? நான் என்ன சொல்றேன்னு புரியுதா..?" என்றார்.

அதுதான்... நான் அவர் விஷயத்தில் யோசிக்க ஆரம்பித்ததன் முதல் படி. அந்த பேச்சை முழுதாக செவி தாழ்த்தி சொற்பொழிவை கேட்க ஆரம்பித்தேன். 'அடடே... நல்லாத்தானே பேசுறார். நேர்மையான கேள்விகள்தானே இவை. எவ்ளோ பெரிய விஷயம் சொல்ல வந்து இருக்கார்..! ஒருவேளை மக்கள் இவர் மேலே சொல்றது தப்பா இருக்குமோ..? என்று நினைத்துக்கொண்டு... அத்தோடு அவரை மறந்தும் விட்டேன்..! காரணம், எனக்கு கொடுக்கப்பட்டு இருந்த ஆரம்பகால இன்புட் அவரை அந்நியராக்கி வைத்திருந்தது. ஆனால், இரண்டு நாள் கழித்து... அவர் சொன்ன மாதிரித்தான் தினமலரில் பெட்டி செய்தியாக ஓர் ஓரத்தில் வந்தது. "பொது சிவில் சட்டம் : அதிரை முஸ்லிம்கள் ஆதரவு". :-)

இதேகாலகட்டத்தில்... பல வருடங்களாக மத்ஹப் சட்டங்களை படித்து (ஃபிக்ஹின் கலைக்களஞ்சியம் : ஹனபி & ஷாபி) அதில் உள்ள குளறுபடிகளை கண்டு நெருடலாக இருந்து... 'ஒரே விஷயத்தில், ஹனபி ஒன்றாக ஷாபி வேறாக இருந்த மசாயில்களில் எது மார்க்க ரீதியில் நபி ஸல் அவர்களின் சரியான செயலாக இருக்கும்' என்று குழம்பி தத்தளித்துக்கொண்டு இருந்து... 'இரண்டுமே சரிதான் தம்பி' என்ற பதிலை இருவரிடமும் பெற்று... 'அப்படின்னா... இரண்டில் எது சிறந்ததோ அதை மட்டும் நான் எடுத்து இரண்டிலிருந்தும் மிக்ஸ் பண்ணி பின்பற்றலாமா' என்றாலும் கூடாதாம்... ஏதாவது ஒன்னை மட்டுமே பின்பற்றனுமாம்... இறுதியில்... அந்த மதஹப் சட்டங்களில் இது நிச்சயம் பிழையானவையாகத்தான் இருக்கும் என்று சுயமாக சிந்தித்து ஒவ்வொன்றாய் வெறுத்து... (உதாரணம்:- திருட செல்லுவதற்கு முன்னர் திருடன் ஓதவேண்டிய துவா) அடுத்து எப்படி, எந்தப்பக்கம் செல்வது, என்ன செய்வது, என்று குர்ஆன் தர்ஜுமாவை மட்டும் படித்துக்கொண்டு இருந்தபோதுதான்... 

தூத்துக்குடியில் நான் டிவி வாங்கிய பிறகு... (அதற்கு முன்னர் எங்கள் வீட்டில் டிவி இல்லை) ஒருநாள், விஜய் டிவியில் ஒருவரின் சொற்பொழிவை எதேச்சையாக 'பார்க்கும்' வாய்ப்பு ஏற்பட்டது. 'அடடே... எல்லாம் சரியா சொல்றாரே..! மத்ஹபில் தப்பா இருக்கும் இது... உண்மையில் இப்படி இருந்தால் நல்லா இருக்குமே என்று நாம் நினைச்ச படியே நம்ம மார்க்கத்திலும் முன்னமேயே இருக்கே...' என்று வியப்போடும் மனநிறைவுடனும் நன்றியுணர்வோடும் அவரைப்பார்த்துக்கொண்டு இருந்த போதுதான்... நண்பன் அதிரை ஹாரிஸ் சொன்னான்... 'இவர்தாண்டா அவர்' என்று..!

அதற்கு முன்னர் 13 வருடங்களாக அவரை பண்டாரவாடையில் 'ஜெய்லாவுதின்' என்றும், அதிரையில் 'PJ' என்றும் அறிந்திருந்த நான் அன்றுதான்... அவரை 'மவுலவி P.ஜைனுல்ஆபிதீன் உலவி' இவர்தானா என்று பரவசத்துடன் பார்த்தேன். அவரது ஆய்வுத்திறனும் அரபிப்புலமையும் பேச்சாற்றலும் அவர்மீது எனக்கு ஒருவித மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்தியது.  அதேநேரம், 'இவரையா இத்தனை காலம் நாம் நம்மைவிட்டு தள்ளி வைத்து நம்மை நாமே பாழ்படுத்திக்கொண்டோம்..?' என்று உள்ளுக்குள் துணுக்குற்றேன். இஸ்லாமிய மார்க்கம் தொடர்பாக மத்ஹப் காரர்களின் பேச்சை கேட்காது இருந்து சுயமாக ஆராய வேண்டும் என்ற கொள்கையில் இருந்த நான்... 'இவரை மட்டும் சுயமாக ஆராயாமல்.. இவ்வளவு காலம் அவர்கள் பேச்சை கேட்டு எப்படி விலகி ஓடினேன்' என்று என்னை நானே அவமானத்தால் நொந்து கொண்டேன்.

சகோ.பிஜேவின் சொற்பொழிவுகள், ஆய்வுகள், கேள்வி- பதில்கள் போன்றவற்றை, 'இவர் ஒரு சிறந்த இமாம்' என்று நான் அறிந்த ஸ்பிக் நகர் பள்ளியின் சுன்னத் ஜமாஅத் மவுலவியிடம் சொல்லி விவாத்தித்த போது... 'மவுலவி பிஜே சொல்றதுதான் சரி' என்று ஏறக்குறைய எல்லா விஷயத்திலும் அவரை சப்போர்ட் பண்ணியது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. 

அப்படியாக, ஓரிரு வருடம் கழித்து, குடந்தை-மேலக்காவேரியில் ஒரு மேடை சொற்பொழிவில்... சகோ.மவுலவி பிஜே அவர்களை நேரில் சந்தித்து சலாம் சொல்லி அருகருகே மேலக்காவேரி பள்ளியில் இஷா தொழுத அன்று (2002) அவர் மூலமாக அல்லாஹ் தந்த உத்வேகம்தான் புஹாரி ஹதீஸ் ஏழு வால்யுமையும் ஒரே நேரத்தில் என்னை வாங்க வைத்தது. அன்று அவர் கூட்டத்தில், 'யார் யாரிடம் ஏதாவது ஒரு குர்ஆன் தர்ஜுமா உள்ளது , கைதூக்குங்கள்' என்றார். நான் உட்பட ஏராளமானோர் கை தூக்கினோம். 'மாஷாஅல்லாஹ்' என்றவர், 'வாங்காதவர்கள் யார் என்று கேட்டு இருக்கனுமோ' என்று கூறி விட்டு.. அடுத்து, 'இம்மாதம் வெளிவந்தபுகாரி ஏழாவது பாகம்  யாரிடம் உள்ளது..?' என்றார்..? எவரிடமும் இல்லை. 'சரி, மற்ற ஆறு பாகம் உள்ளவர்கள்..?' எவரிடமும் இல்லை. இப்படியே குறைத்து குறைத்து வந்து 'ஒரு பாகமாவது யாரிடம் உள்ளது..?' என கேட்க ஒரு சிலர் மட்டும் கை தூக்கினர். 

இந்த மாதிரியான மோசமான நிலையிலா நாம் இருக்கிறோம்... என்று அவருக்கு வந்த நியாமான வருத்தத்தில்... முன்வரிசையில் அமர்ந்து இருந்த நான் வெட்கி தலைகுனியும் அளவுக்கு அடுத்து அவரின் உரை என்னை மிகவும் பாதித்தது. ஆமாம்..! அவர் உரையின் படி...  நான் சினிமாவுக்கு செலவழித்துள்ளேன். காமிக்ஸ், நாவல், விகடன், குமுதம், தினதந்தி, தினமணி, தி ஹிந்து, எக்ஸ்ப்ரஸ்... என்று எதற்கெல்லாமோ... எவ்வளவோ செலவு செய்து உள்ளேனே..! அந்த பணத்தில் எழென்ன... எழுநூறு பாகம் நான் வாங்கி இருக்கலாமே..! ஏன் எனக்கு வாங்க மனம் வரவில்லை..? மறுமைக்காக வாழும் எண்ணம் எனக்கு இல்லையா..? மார்க்கத்தை அறியும் ஆவல் எனக்கு இல்லையா..? இதுபோல யாராவது வந்து எதயாவது மார்க்கம் என்று சொன்னால், 'சொல்பவர் சொல்வது சரியா' என்று எப்படி நான் உரசிப்பார்ப்பது..? 

அதே ஊட்டத்தில்... அடுத்த நாளே... குடந்தையில் அலைந்து புஹாரி கிடைக்காமல்... தஞ்சாவூர் ஹாஜியார் புக் டிப்போ சென்று ஏழு வால்யுமையும் ஒரே நேரத்தில் வாங்கி தூக்க முடியாமல் தூக்கி வந்தேன். அடுத்து, முஸ்லிம், திர்மிதி என்று என்னை சரியான பாதையில் இவரின் இந்த மனதை தொட்ட உரை மூலம் என்னை சரியான பாதையில் பயணிக்கவைத்த இறைவனுக்கே புகழனைத்தும்.
 .
மேலும்,  விஜய், விண், மூன் மீடியா சிடிக்கள், ஆன்லைன் பிஜே தளம், DAN தமிழ், இமயம் வாயிலாக... அவரால் நிறைய மார்க்க விஷயங்களில் நான் விளக்கம் பெற்றிருக்கிறேன். அதெல்லாம் நான் குழம்பி வேறு எப்பக்கம் செல்வது என்று முட்டு சந்தில் திக்கு முக்காடி திசை அறியாமல் நின்ற விஷயங்கள். அல்ஹம்துலில்லாஹ். எனக்கு பல விளக்கங்களை ஊட்டின அவரது உரைகளும் எழுத்துக்களும்.

அப்போதெல்லாம்... அவற்றில், அவர் அடிக்கடி சொல்லும் அறிவுரையில் எனக்கு மிகவும் பிடித்தது யாதெனில்... "நான் சொல்கிறேன் என்பதால்  அப்படியே நம்பி பின்பற்றாமல், நீங்களும் கற்று ஆய்வு செய்து சரிபார்த்து விட்டு விளங்கி பின்பற்றுங்கள்" என்பதே..! ஒருவர் மார்க்க விஷயத்தில் முனைந்து கஷ்டப்பட்டு பல நாட்கள் பல நூல்களை ஆய்வு செய்த பின்னரும், இப்படியும் சொல்ல ஒரு கர்வமற்ற மனப்பக்குவம் வேண்டுமே. மாஷாஅல்லாஹ்.

இப்படி, என்னைப்போல... எண்ணற்றோர் சரியான இஸ்லாமிய பாதையை தேர்ந்தெடுக்க அவர் ஒரு கருவியாக இருக்கிறார். தமிழ்கூறும் நல்லுலகிற்கு, அவர் ஓர் இஸ்லாமிய சொத்து.

கடந்த 27 வருடங்களாக அவரின் இந்த அயராத மார்க்க உழைப்புக்கு உரிய நற்கூலியை வல்ல அல்லாஹ் அவருக்கு ஈருலகிலும் வழங்கி அவரை மகிழ்விக்கவும், அவரின் அளப்பரிய தொண்டுகள் மேலும் பலருக்கு சென்றடைந்து இன்னும் எண்ணற்றோர் பயன்பெறவும், அவருக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நோயை அடியோடு முற்றிலுமாக நீக்கி அருளி, இன்னும் பல்லாண்டுகள் அவருக்கு நல்வாழ்வினை தந்து, மார்க்க பிரச்சார அழைப்பு பணியில் இன்னும் சிறப்பாக ஈடுபட அவருக்கு உடலளவிலும் & மன அளவிலும் பெரும் ஆரோக்கியமும் ஊக்கமும் தந்தருளவும்... அவரின் பாவங்களை மன்னிக்கவும், இருகரம் ஏந்தி வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன். யா அல்லாஹ், எனது துவாவை ஏற்றுக்கொள்வாயாக..! ஆமீன்.